புல்வாயோ : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்த பிரைன் லாராவின் சாதனை அருகே வந்தும் அதனை முறியடிக்காமல் தென்ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் செய்த காரியம் ரசிகர்களை அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இடம்பெறாதவை.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி புல்வாயோ நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டோனி டி சொர்சி 3 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனால் 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா அணி இழந்தது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் வியான் முல்டரும் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய டேவிட் பெட்டிங்காம் 82 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் கேப்டன் முல்டர் 116 பந்துகளை எதிர் கொண்டு சதம் அடித்தார். இதேபோன்று நான்காவது விக்கெட்டுக்கு 19 வயது வீரர் லுகான் பிரிட்டோரியல் ஜோடி சேர்ந்து வியான் முல்டர் விளையாடினார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதில் பிரிட்டோரியஸ் 78 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ஆனால் வியான் முல்டர் தொடர்ந்து அதிரடி காட்ட 214 பந்துகளில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 217 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 465 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா தொடர்ந்தது. 264 ரன்கள் உடன் களத்தில் இருந்த வியான் முல்டர், தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் தடுமாறினர். 297 பந்துகளில் வியான் முல்டர், முச்சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சேவாக்குக்கு பிறகு அதிவேகமாக முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமை வியான் முல்டர்க்கு கிடைத்தது.
வியான் முல்டர் விக்கெட்டை யாராலும் எடுக்க முடியாத நிலையில் அடுத்த 27 பந்துகளில் அவர் 50 ரன்கள் சேர்க்க 324 பந்துகளில் 350 ரன்கள் எடுத்தார். இரண்டாவது நாள் ஆட்டம் தான் நடைபெறுகிறது என்பதால் முல்டர் எளிதாக 400 ரன்களுக்கு மேல் அடித்து லாராவின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்து கொண்டார்.
அவர்தான் கேப்டன் என்பதால் அவர் நினைத்திருந்தால் நிச்சயம் 400 ரன்கள் மேல் எடுத்திருக்க முடியும். ஆனால் முல்டர் 367 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 626 முதல் எடுத்தது.