பார்ல்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடரில் நேற்று சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கும், தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்த பார்ல் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பார்ல் ராயல்ஸ் அணியை சேர்ந்த 18 வயது அறிமுக வீரர் பிரிட்டோரியஸ் 51 பந்துகளில் 97 ரன்கள் குவித்து வெறியாட்டம் ஆடினார்.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த போது அதில் பெரும்பாலான ரன்களை பிரிட்டோரியஸ் அடித்து முடித்தார். சன்ரைசர்ஸ் அணி அவரது ஆட்டத்தால் அரண்டு போனது. ஜோ ரூட்டும், பிரிட்டோரியஸ்-உம் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர். பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். அவர் 7 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 பந்துகளில் 28 ரன்களும், ஜாக் கிரவ்லி 18 பந்துகளில் 27 ரன்களையும் சேர்த்து இருந்தனர்.
அடுத்து பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக அறிமுக வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் களமிறங்கினர். பிரிட்டோரியஸ் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர் 51 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். 10 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
13 வது ஓவரில் அவர் ஆட்டம் இழந்த போது பார்ல் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 132 ஆக இருந்தது. அதன் பின் ஜோ ரூட் மற்றும் கேப்டன் டேவிட் மில்லர் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 18.4 ஓவர்களில் பார்ல் ராயல்ஸ் அணி 176 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோ ரூட் 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதை அடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இந்த ஆண்டு தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது.