மும்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட்-க்கு இனிமேலும் வாய்ப்புள்ளதா என்பது குறித்து முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாபா கரீம் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்க்கிறது.
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வரும் இந்திய அணியில் நீண்ட குழப்பத்திற்கு பின்னர் தற்போது தான் பேட்டிங் வரிசை சரியாக அமைந்துள்ளது. குறிப்பாக தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் மோதலில் தினேஷ் கார்த்தி-ஐ தேர்வு செய்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ரிஷப் பண்ட் ஓரம்கட்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாபா கரீம் பேசியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் மீண்டும் ப்ளேயிங் 11-க்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனினும் பண்ட்-ஐ விட தினேஷ் கார்த்திக்-ஐ தேர்வு செய்தது சிறப்பான முடிவு என்று தான் கூறுவேன். ஏனென்றால் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயம் தினேஷ்கார்த்திக்கிடம் தான் உள்ளது.
இந்திய அணிக்கு 6வது இடத்தில் ஒரு ஃபினிஷர் வேண்டும் என்ற சூழல் உள்ளது. அதற்கு தினேஷ் பொருந்தியுள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் அப்படி எந்தவொரு குறிப்பிட்ட பொருப்பையும் ஏற்று ஆடியதில்லை. அவரின் இடத்தை பூர்த்தி செய்ய அணியில் வீரர்கள் உள்ளனர். ஆனால் ஃபினிஷர் ரோலை பண்ட் செய்தது இல்லை என்பதால் இது சரியான முடிவு என்று தான் கூறுவேன் என சாபா கரீம் பேசியுள்ளார்.