டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5ஆவது ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கைக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது வங்கதேசம்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா வங்கதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று இரவு வங்கதேசம்-இலங்கை அணிகள் நடுவேயா லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியில் கேப்டன் லசித் மலிங்கா முழு உடற்தகுதி பெறாததால் விளையாடமுடியவில்லை. இதனால் இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் களமிறங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 4.5 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சபீர் ரஹ்மான்-ஷகிப் அல்ஹசன் ஜோடி சிறப்பாக ஆட, வங்கதேசம் சரிவிலிருந்து மீண்டது. அதிரடியாக ஆடிய சபீர் 54 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரஹ்மான்-அல்ஹசன் ஜோடி 82 ரன்கள் குவித்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது வங்கதேசம். இலங்கைத் தரப்பில் சமீரா 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
148 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் தில்ஷன் 12 ரன்களில் நடையைக் கட்டினார். சன்டிமல்-ஜயசூர்யா ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. சன்டிமல் 37 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கேப்டன் மேத்யூஸ் களம்புகுந்தார்.
மறுமுனையில் ஜெயசூர்யா 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த திசாரா பெரேரா 4 ரன்களிலும், சிறிவர்த்தனா 3 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
இதனால் இலங்கை வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 56 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் 16-ஆவது ஓவரை வீசிய அல்ஹசன் 6 ரன்களும், அடுத்த ஓவரை வீசிய முஸ்தாபிஜுர் ரஹ்மான் 4 ரன்களும் மட்டுமே கொடுக்க, இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதன்பிறகு பொறுமையிழந்த கேப்டன் மேத்யூஸ், அல்-அமீன் வீசிய 18-ஆவது ஓவரில் அடித்து ஆட முற்பட்டபோது, அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்பிறகு ஷனகா 14 ரன்களிலும், குலசேகரா ரன் ஏதுமின்றியும் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.
இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம். டி20 போட்டி வரலாற்றில் முதல்முறையாக இலங்கையை வீழ்த்தியுள்ளது வங்கதேசம். இந்தியாவிடம் தோற்ற வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சுக்கு எதிரான ஆட்டத்திலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.