டெல்லி: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த ஒரு முக்கியத்துவமும் இன்றி நடந்து வரும் இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான போட்டி தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 135 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்த இலங்கை அணியில் மேத்யூஸ் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்தார். அப்போது ஹெல்மெட் சரியில்லாததால் அதனை மாற்ற சென்றபோது தாமதமாக பந்து எதிர்கொள்ள வந்தார்

இதற்கு வங்கதேச அணி டைம் அவுட் முறையில் அவுட் கேட்க நடுவரும் மேத்தியூஸ்க்கு அவுட் வழங்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் இரண்டு நிமிடத்திற்குள் பேட்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை என்றால் எதிரணி அவுட் கேட்டால் அவர் அவுட் வழங்கப்படுவார். இந்த நிலையில் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது இல்லை.
ஆனால் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா தொடருக்கு சென்ற இந்திய அணி வீரர்கள் முதல் முறையாக டைம் அவுட் ஆகும் சூழல் ஏற்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் மிகப்பெரிய மனசைக் காட்டினார். அப்போது இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நான்காவது இடத்தில் சச்சின் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் சச்சின் பீல்டிங் செய்யும் போது களத்தில் 18 நிமிடம் இல்லை என்பதால் அவர் 18 நிமிடம் கழித்து தான் பேட்டிங் செய்ய வர வேண்டும் என நடுவர் கூறினார்.
இதனால் சச்சின் அந்த இடத்திற்கு வருவாரா இல்லை எந்த பேட்ஸ்மேனை அனுப்புவது என்ற குழப்பம் இந்திய அணியில் ஏற்பட்டது. இதனை அடுத்து கங்குலி ஆறு நிமிடம் கழித்து பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். அப்போது டைம் அவுட் முறையை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க அணி அவுட் கேட்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது கேப்டன் ஸ்மித் தன்னுடைய பெரிய மனசை காட்டி வேண்டாம் என்று விட்டுவிட்டார். இது அப்போது மிகவும் பேசும் பொருளாக மாறியது. ஆனால் தற்போது ஹெல்மெட் சரியில்லை என்று செல்வதற்கு கூட வங்கதேச அணி இந்த ரூல்ஸை பயன்படுத்தி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.