மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர்.
மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே.
கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிராவிடும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து புதிய உலக சாதனை படைத்தனர்.
இருவரும் இணைந்து இதுவரை 17 முறை 100 அல்லது அதற்கு மேற்பட்ட பார்ட்னர்ஷிப் ரன்களை குவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இந்த சாதனை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் - ஹெய்டன் மற்றும், மேற்கு இந்தியத் தீவுகளின் கார்டன் கிரீனிட்ஜ் - ஹெய்ன்ஸ் ஜோடியிடம் இருந்தது.
சச்சின் 143 ரன்களைக் குவித்து வெளியேறினார். டிராவிட் 111 ரன்களை எடுத்திருந்தபோது காயமடைந்து வெளியேறினார்.
முரளி விஜய் 30 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்பஜன் சிங் 13 ரன்கள் எடுத்தார்.
ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை எடுத்திருந்தது.