மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாறில் இன்று சச்சின் அடித்த நூறாவது சதத்தையும், சதத்தால் கிடைக்க வேண்டிய பெருமைக்கு பதில் விமர்சனங்கள் எழுந்ததையும் பற்றி பார்ப்போம்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மார்ச் 17 இந்தியா, வங்கதேசம் மோதின. நீண்ட நாட்களாக தன் நூறாவது சதத்தை அடிக்காமல் இழுத்து வந்த சச்சின் இந்த போட்டியில் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் ஆட்டம் துவங்கியது.
இந்த போட்டியில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
அப்போது சச்சின் மீது மிக அதிக எதிர்பார்ப்பு இருந்தது. நூறாவது சதத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகள் தள்ளிப் போட்டு வந்த நிலையில், வங்கதேசத்தை எளிதாக சமாளித்து சதம் அடிப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதே போலவே முதலில் ஆடினார் சச்சின்.
[READ THIS: முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எப்போது நடந்தது? அதில் வென்றது யார் தெரியுமா?]
முதலில் 102 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கினார் அவர். ஆனால், சச்சினுக்கு எப்போதும் சதம் அருகே வந்தவுடன் ஏற்படும் பதட்டம் அப்போதும் வந்துவிட்டது. தடுமாற ஆரம்பித்த அவர், பந்துகளை வீணடித்தார். 1௦2 பந்துகளை சந்தித்து வலுவாக நின்ற அவர், அடுத்த 20 ரன்களை சேர்க்க 36 பந்துகளை எடுத்துக் கொண்டார்.
138 பந்துகளில் சதம் அடித்தார் சச்சின். அவர் சதம் அடித்த நேரத்தில் இந்தியாவின் ரன் ரேட் சிறிது அடி வாங்கி விட்டது. மற்ற வீரர்கள் அப்போது அதிவேகமாக ரன் குவித்தனர். எனினும், இந்தியா 300ஐ தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் சிறிது குறைந்து 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வங்கதேசம் போன்ற எதிரணிக்கு கொஞ்சம் சிரமமான இலக்கு தான் என்றாலும், நல்ல பந்துவீச்சு கூட்டணி அமையாததால் அன்று இந்தியா தோல்வி அடைந்தது. முக்கிய போட்டியில் இந்தியா தோற்றதால், அதுவும் அன்று வங்கதேசம் சாதாரண அணியாக இருந்த போது தோற்றதால், ரசிகர்களின் கோபம் சதம் அடிக்க பந்துகளை வீணாக்கிய சச்சின் மீது திரும்பியது.
நூறாவது சதம் அடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் சச்சினால் அன்று இருக்க முடியவில்லை. ஆசிய கோப்பை வரலாறிலும் இது இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாக இருந்தது. இந்தியா அந்த தொடரில் தோற்றாலும், கோலி 357 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.