"சேப்பலை பற்றி சச்சின் சொன்னது உண்மைதானுங்கோ..." இலங்கை அணியில் இருந்தும் ஆதரவு
கொல்கத்தா: சச்சின் டெண்டுல்கர் தனது சுய சரிதையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சச்சினுக்கு இந்தியாவின் பிரபல வீரர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பிற நாட்டு வீரர் ஒருவரும் இதே கருத்தை கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீரரான முரளிதரனிடம், சச்சினின் எழுதி வர உள்ள சுயசரிதை புத்தகத்தில் சேப்பல் குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த முத்தையா, "சச்சின் கூறியதில் உண்மை உள்ளது. இதை இந்திய அணி ஆக்கப்பூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொண்டு, பயிற்சியாளர்களை நியமிக்கும்போது பலமுறை யோசித்துக்கொள்வது நல்லது. இதற்கு மேல் கருத்து கூற முடியாது" என்றார்.
இந்நிலையில், சச்சின் புத்தகத்தில் உள்ள அம்சங்களுக்கு தன்னால் கருத்து கூற முடியாது என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு என்னை அந்த பதவிக்கு கொண்டுவர சேப்பல், சதி செய்தார் என்று சச்சின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், டிராவிட் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சச்சினுக்கும்-சேப்பலுக்கும் நடுவே நடந்த உரையாடலை பற்றிதான் புத்தகத்தில் சச்சின் கூறியுள்ளார். எனவே இரு நபர்களுக்கு இடையே நடந்த உரையாடலில் யார் மீது தவறு என்று நான் எப்படி கருத்து கூற முடியும்.
ஊடகங்களின் வழியாக அறிந்து கொண்ட தகவலுக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்த சர்ச்சையை தவிர புத்தகத்தில் படித்து பார்க்க மேலும் பல நல்ல விஷயங்கள் இருக்கும். எனது கவனம் அதில்தான் உள்ளது" என்று தெரிவித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications