மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ப்ரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ப்ரித்வி ஷா பதினெட்டு வயதே ஆன இளம் வீரர்.
சச்சின், ப்ரித்வி ஷாவை அவரது எட்டு வயதிலேயே பார்த்திருக்கிறார். அப்போதே அவரது ஆட்டத்திறனை கணித்த சச்சின், "எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரர்" என கணித்துள்ளார். பத்து வருடம் கழித்து, அவரது கணிப்பு தற்போது உண்மையாகி உள்ளது.
சச்சின் பத்து வருடம் முன்பு ப்ரித்வி ஷாவை பார்த்த போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு நண்பர் சச்சினிடம், ப்ரித்வி ஷாவுடைய ஆட்டத்தை பார்த்து அவருக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டு இருக்கிறார். அதை ஏற்று, ப்ரித்வி ஷாவுடன் சிறிது நேரம் செலவிட்ட சச்சின், அவருக்கு ஆட்டத்தில் சில அறிவுரைகள் அளித்திருகிறார்.
அதே போல, ப்ரித்வி ஷா பேட்டை பிடிக்கும் முறை, பேட்டிங்கின் போது நிற்கும் தோரணை உள்ளிட்ட தனித்துவமான திறன்களை கண்ட சச்சின், அவற்றை எந்த பயிற்சியாளர் கூறினாலும் மாற்ற வேண்டாம், ஒருவேளை மாற்றுமாறு கூறினால் அவர்களை என்னிடம் பேசச் சொல் என கூறி இருக்கிறார்.
அவரது திறன் பற்றி கூறிய சச்சின், ஒரு சிறப்பான வீரரிடம் எதையும் மாற்றாமல் இருப்பதே முக்கியம். முழுமையான திறன்களோடு இருப்பது கடவுளின் பரிசு என தெரிவித்துள்ளார்.
அந்த சந்திப்பின் போது சச்சின், தன் அருகில் இருந்த நண்பரிடம், "நீ பார்த்துகொண்டு இருக்கிறாயா? அவர் எதிர்கால இந்திய அணி வீரர்" என கூறி இருக்கிறார். தற்போது இது உண்மையாகி இருக்கிறது.
சச்சின் எப்படி தன் பதின்ம வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தாரோ, அதே போல பதினெட்டு வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார், ப்ரித்வி ஷா.