டெல்லி: பிரதமர் மோடியின் 'செல்பி வித் டாட்டர்' என்ற அழைப்பின் படி, தனது மகள் சாராவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்பியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சச்சின்.
அரியானாவில் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டு வருவதால், பாலின விகித வேறுபாடு அதிக அளவில் இருப்பதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்திருந்தார். எனவே, பெண் குழந்தைகளின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில், மகளுடன் செல்பி எடுத்து அதனை அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் என அவர் அழைப்பும் விடுத்திருந்தார்.
இதற்கு 'செல்பி வித் டாட்டர்' எனப் பெயரிடப்பட்டது. பிரதமரின் அழைப்பிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனது மகள்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்களை தந்தைகள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் கூறப்படும், சச்சின் டெண்டுல்கரும் தனது 17 வயது மகள் சாராவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்தாலிக்கு சுற்றுலா போயிருந்த இடத்தில் வைத்து இந்த செல்பியை சச்சின் எடுத்தார். அந்தப் படத்தைத்தான் தற்போது செல்பி வித் டாட்டருக்குப் போட்டுள்ளார்.
ரோம், வாட்டிகன் சிட்டி ஆகிய நகரங்களுக்குச் சென்றிருந்த சச்சின் அங்கு கொலோசியம் உள்ளிட்ட இடங்களையும் சுற்றிப் பார்த்தார்.