குழந்தைதன சிரிப்புக்கு சொந்தக்காரர்
பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் கடந்த 1973ல் பாபி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி, தொடர்ந்து பல ரொமாண்டிக் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரது குழந்தைதன சிரிப்பால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கவரப்பட்டு, அவர், கேரக்டர் ரோல்களில் நடித்தபோதும் அவரை சூப்பர் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.
இன்று காலை உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேன்சரால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரிஷிகபூர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை 8 மணியளவில் அவர் உயிரிழந்தார். நேற்று பிரபல நடிகர் இர்பான் கான் உயிரிழந்த நிலையில், இன்று ரிஷிகபூர் உயிரிழந்தது பாலிவுட் ரசிகர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சச்சின், கோலி இரங்கல்
இந்நிலையில் பாலிவுட் ரொமாண்டிக் ஹீரோ ரிஷிகபூரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது படங்களை பார்த்தே தான் வளர்ந்ததாகவும், அவரது மறைவு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த விஷயம் நம்பமுடியாததாக உள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளம் மூலம் இரங்கல்
இதேபோல அனைத்து விளையாட்டுகளையும் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீரேந்தர் சேவாக், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, சாய்னா நேவால், ரவி சாஸ்திரி, இஷாந்த் சர்மா, ஆர்.பி சிங், முகமது கையிப், யோகேஸ்வர் தத், கீதா பஸ்ரா, மிதாலி ராஜ் ஆகியோரும் ரிஷிகபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.