200 ரன்களைக் குவி்த்தார் சச்சின்- ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனை

முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின்.
அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.
147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.
இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.
முன்னதாக, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று குவாலியரில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.
இருப்பினும் சச்சினும், திணேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே திணேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் நல்ல பார்முக்கு வந்து விட்டதை உணர்த்தும் இன்னொரு ஆட்டத்தைக் கொடுத்தார் அவர்.
சிறப்பாக ஆடிய திணேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்திய அணியில் கேப்டன் டோணி 35 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். யூசுப் பதான் 23 பந்துகளில் 36 ரன்களைக் குவித்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை எடுத்தது.
இந்தியா ஒரு நாள் போட்டி ஒன்றில் 400 ரன்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications