மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது விஜய் ஹசாரே தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் இன்று தன்னுடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக கொண்டுவர வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அர்ஜுன் டெண்டுல்கரும் கடுமையாக உழைத்து வருகிறார். அர்ஜுன் மும்பை அணியில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இடம் பெற்றாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

அர்ஜுன் டெண்டுல்கர், தன்னுடைய திறமையை நன்றாக வெளிப்படுத்தினாலும், இந்திய அணியில் இடம்பெறும் அளவுக்கு அவர் பெயர் வாங்கவில்லை. இந்த சூழலில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் ரவுண்டில் அர்ஜுன் டெண்டுல்கர் விலை போகவில்லை.இதனை அடுத்து, கடைசி நேரத்தில் மும்பை அணி அவரை வாங்கியது.
இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடி வந்தார். அண்மையில் நடந்த சையது முஸ்தாக் அலி,தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது அர்ஜுன் டெண்டுல்கர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.இந்த சூழலில் விஜய் ஹசாரே தொடரில் ஒடிசா அணிக்கு எதிராக கோவா அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றார்.
பந்துவீச்சில் 61 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.இதை அடுத்து ஹரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. பேட்டிங்கில் 14 ரன்கள் எடுத்தார். மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் 26 ரன்களும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் அர்ஜுன் எடுத்தார்.
இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் கோவா அணியில் இடம் பெறவில்லை. இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கோவா அணி அடுத்த சுற்றுக்கு செல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ள நிலையில் அவர் ஏன் நீக்கப்பட்டார்? இல்லை புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஓய்வு வேண்டும் என்று கேட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அர்ஜுன் டெண்டுல்கர் கடைசியாக விளையாடிய ரஞ்சிக் கோப்பையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.