மும்பை: மும்பையில் நடத்த புத்தக விழா ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சச்சின் , தமிழில் திடிரென்று பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடிய போது அவர்கள் கூறிய முன்னாடி, பின்னாடியை புரிந்து கொண்டேன் என அழகுத் தமிழில் சச்சின் கூறிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.
மும்பையில் ஒரு தனியார் ஹோட்டலில் "டெமாக்ரசி 11- தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி" என்ற கிரிக்கெட் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சசி என்பவரால் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் எப்படியெல்லாம் மாறியது , பல மதங்கள் உள்ள நம் நாட்டில் கிரிக்கெட் எப்படியெல்லாம் ஒற்றுமையை ஏற்படுத்தியது என்று ராஜ்தீப் சர்தேசாய் எழுதியுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புத்தகம் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த வெளியிட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த புத்தக வெளியிட்டு விழா முடிந்ததும் மேடையில் இருந்த முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான கிரிக்கெட் சம்பவங்கள் குறித்து பேசினார். அப்போது சச்சின் முக்கியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டு அணியுடன் மும்பை அணி மோதிய ஒரு உள்ளூர் போட்டி குறித்து அவர் பேசினார். அப்போது "அந்த பிட்சில் பால் அதிகம் ஸ்விங் ஆகியது. அதனால் நான் அடிப்பதற்கு வசதியாக முன்னால் சென்று நின்றேன். இதை பார்த்த கீப்பர், பவுலரிடம், முன்னாடியே பந்தை பிட்ச் செய்யும்படி கூறினார். அதை நான் புரிந்து கொண்டேன்." என்று கூறினார். அப்போது சச்சின், அந்த கீப்பர் கூறிய ''முன்னாடி, பின்னாடி'' வார்த்தைகளை மட்டும் தமிழில் சொல்லிக் காட்டினார்.
சச்சின் டெண்டுல்கரின் அந்த தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கவே அரங்கில் இருந்த மக்கள் அனைவரும் கைதட்ட ஆரம்பித்தனர். அவருடன் இருந்த இந்திய அணியின் முன்னாள் வீர்ரகள் சச்சினை ஆச்சர்யமாக பார்த்தனர். நிறைய தமிழர்களுடன் பழகி இருப்பதால் எனக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் என்று அவர் கூறினார். இந்த வீடியோ தற்போது அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.