அதிரடி ஃபார்ம்
நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாது இருந்த பண்ட், ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி பெற்றுக்கொடுத்தார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 274 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 68.50 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 270 ரன்கள் அடித்தார். அந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இவர் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் வீரர்களுடன் ஒப்பீடு
பேட்டிங்கிலும் சரி, விக்கெட் கீப்பிங் செய்வதிலும் சரி, ரிஷப் பண்ட்-ன் வேகமும், ஆக்ரோஷ ஆட்டமும் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட் அடுத்த தோனியாக உருவெடுப்பார் என்று ஒரு சிலரும், அவர் 2வது கில் கிறிஸ்ட் என்று ஒரு சிலரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் வீரர்கள் சிலரே பண்ட்-ஐ அடுத்த தோனி என ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
சச்சின் எதிர்ப்பு
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், எனக்கு ஒருவருடன் இன்னொருவரை ஒப்பிடுவது பிடிக்காத ஒன்று. ஒவ்வொரு வீரருக்கும் தனி அடையாளம் உள்ளது. தான் அடுத்த கில் கிறிஸ்ட்டாக இருக்க வேண்டும் என ரிஷப் பண்டே நினைக்க மாட்டார். ஒவ்வொருவரும் தனக்கென தனி அடையாளம் அமைக்க எண்ணுவார்கள். ரிஷப் பண்ட்-ம் அப்படிதான் நினைப்பார்.
நிதானம் வேண்டும்
அவரின் தனிப்பட்ட ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த சில தொடர்களில் தொடரில் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அட்டகாசமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தன் ஆட்டத்தை மேம்படுத்திக்கொண்டே வருகிறார். அனுபவம் பெற பெற ரிஷப் பண்ட் , தான் சற்று நிதானமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்வார். ஆனால் எந்தவித பயமும் இன்றி நம்பிக்கையுடன் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷ ஆட்டத்தை பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சிறந்த ஃபார்ம்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பதால் ரிஷப் பண்ட்- தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில தொடர்களில் காட்டிய அதே அதிரடியை நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் காட்டினால், நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.