இளம் வீரர்களை பாராட்டிய சச்சின்.. ஆனால் ஒன்று..!!
மும்பை: இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளனர்.
இதனால், இந்த தொடரில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக மாயங் அகர்வால், சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்கினார்.
சுப்மான் கில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். இதே போன்று மாயங் அகர்வால் மும்பை டெஸ்டில் சதம் விளாசினார்.

மாயங் அகர்வால்
இதனிடையே, இளம் வீரர்களின் ஆட்டத்தை கவனித்துள்ள சச்சின் அவர்களை வெகுவாக பாராட்டியள்ளார். மாயங் அகர்வால் நல்ல பந்தில் கூட ரன் அடிப்பதாக பாராட்டு தெரிவித்தார். இதனால் மாயங் அகர்வாலுக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் சற்று பதற்றம் அடைவார்கள் என அவர் கூறினார்.

பாராட்டு
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்த போது, மாயங் அகர்வால் தம்மை நிலைநிறுத்தி கொள்ள நேரம் எடுத்து பின்னர் ரன் சேர்த்த விதம் தம்மை கவர்ந்ததாக சச்சின் கூறினார். இதே போன்று சுப்மான் கில்லுக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதாக சச்சின் பாராட்டினார்

சுப்மான் கில்
சுப்மான் கில்லுக்கு பேட்டிங் நுட்பம் நன்கு தெரிந்துள்ளதாகவும், அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கினாலும் ஜொலிப்பார் என்று சச்சின் தெரிவித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் தொடக்க வீரராக 91 ரன்கள் எடுத்ததே அதற்கு சான்று என்று சச்சின் குறிப்பிட்டார்.

அறிவுரை
இருப்பினும் சுப்மான் கில் 30, 40 ரன்கள் என அடித்துவிட்டு விரைவில் ஆட்டமிழந்துவிடுவதாக சச்சின் குறிப்பிட்டார். 40 ரன்களை செஞ்சூரியாக மாற்றும் பழக்கத்தை அவர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட சச்சின், அதற்கு கவனம் சிதறாமல் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் சதம் அடிக்க வேண்டும் என்று தமக்கு தாமே அழுத்தத்தை சுப்மான் கில் ஏற்படுத்திக்க கூடாது என்று சச்சின் கூறினார். ஸ்ரேயாஸ் ஐயர் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டதாகவும் சச்சின் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications