
கங்குலியுடன் மோதல்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல்தான் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலியை அணியில் இருந்து நீக்கினார் என்பது பெரும் குற்றச்சாட்டாக வெடித்தது. இந்நிலையில் சச்சின் எழுதி வரும் ஆறாம் தேதி வெளியாக உள்ள புத்தகத்தில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட்டையும் சேப்பல் நீக்க முயற்சி செய்த தகவல் இடம் பெற்றுள்ளது.

வீட்டுக்கே வந்து கொளுத்தி போட்டார்
அந்த புத்தகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இருந்த கிரேக் சேப்பல் செயல்பாடுகள் குறித்து டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். அதில், 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு முன்னதாக சில மாதங்களுக்கு முன் தனது வீட்டுக்கு வந்த கிரேக் சேப்பல், கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொள்ளுமாறும், ராகுல் டிராவிட்டிடம் இருந்து கேப்டன் பொறுப்பை மாற்றி தன்னிடம் தர உதவி செய்வதாகவும் அவர் கூறியதைக் கேட்டு தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று சச்சின் குறிப்பிட்டிருந்தார்.

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
இந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுக்களால் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக கிரேக் சாப்பல் தெரிவித்துள்ளார். நான் சொற்போரில் ஈடுபட விரும்பவில்லை. என்னுடைய பயிற்சிக் காலக்கட்டத்தில் நான் ராகுல் டிராவிட்டை நீக்கவோ, சச்சினை கேப்டனாக்கும் முயற்சிகளையோ மேற்கொள்ளவில்லை. சச்சின் நூலில் இவ்வாறு வந்திருப்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்று சேப்பல் தெரிவித்துள்ளார்.

அணியை பின்னோக்கி இழுத்தார்
ஆனால், சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள், சச்சின் கூறியுள்ளது உண்மைதான் என்று தெரிவித்துள்ளனர். வி.வி.எஸ். லட்சுமணன் இதுகுறித்து கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியை பின்னோக்கி இழுத்துச் சென்றது சேப்பல்தான். மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடிய என்னை, ஓப்பனிங்கில் இறங்குமாறு சேப்பல் கட்டாயப்படுத்தினார். ஆனால் ஓப்பனிங்கில் நான் சரியாக சோபிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டி எப்படியோ தப்பித்தேன். இல்லாவிட்டால் 2006லேயே எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருப்பார்.

வீரர்களுக்குள் அரசியல் செய்தார்
சேப்பல் சீனியர் வீரர்களுக்கு ஒருவித அச்சத்தை ஊட்டிக்கொண்டே இருந்தார். வீரர்களிடையே சீனியர்-ஜூனியர் பாகுபாட்டை வளர்த்தார். நான் பல கேப்டன்கள், பல கோச்சுகளின்கீழ் விளையாடியுள்ளேன். ஆனால் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது மட்டும்தான், இந்திய அணிக்குள் ஒரு இறுக்கமான சூழ்நிலை இருந்தது என்றார்.

என்ன கொடுமை சார் இதெல்லாம்
இதேபோல இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜாகீர்கானும் சேப்பல் மீது குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், சேப்பல் பயிற்சியாளராக வந்தபோது நான் சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னிடம் அவர் கூறிய முதல் வார்த்தையே "நான் பயிற்சியாளராக இருக்கும்வரை உன்னை அணியில் விளையாட விடமாட்டேன்" என்பதுதான். எப்படியெல்லாமோ முயற்சி செய்து என்னை அணியில் சேர்க்கவிடாமல் செய்து பார்த்தார். ஆயினும் அணியில் எனக்கு இடம் கிடைத்தது என்றார்.

சேப்பலின் நோக்கம் என்ன?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல், இந்திய அணியையும், அதன் திறமையான வீரர்களையும் உருக்குலைக்கும் நோக்குடனே தனது பயிற்சியாளர் காலத்தை பயன்படுத்தியுள்ளது இந்த வீரர்களின் குற்றச்சாட்டுகளில் இருந்து உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications











