சச்சின், சிரஞ்சீவி, நாகர்ஜூனா... திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ரகசியம் தெரியுமா?
திருப்பதி: அரசியலில் புத்தம் புதிய கூட்டணிகள் அவ்வப்போது உருவாகி அதிர்வலைகளை உருவாக்கும். கிரிக்கெட் வீரரும் ராஜ்யசபா எம்.பியுமான சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜூனா இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணிதான் தங்களின் அணியின் வெற்றிக்காக ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி, நடிகர்கள் நாகார்ஜூனா, அல்லுஅரவிந்த் ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று அதிகாலை திருமலைக்கு வந்தனர்.
ஏழுமலையானை தரிசிப்பதற்காக செவ்வாய்கிழமை மாலையே திருப்பதிக்கு வந்து சேர்ந்த இவர்கள், திருமலையில் தங்கியிருந்தனர். புதன்கிழமையன்று காலை சுப்ரபாத தரிசனத்தில் ஏழுமலையானை கண் குளிர தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் விஐபிக்கள்
சச்சின் டெண்டுல்கர் தன் மனைவி அஞ்சலி மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தார். அதேபோல், சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகியோரும் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டு, பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

விஜபி தரிசனம்
கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் பக்தர்கள் அதிகம் இருந்த போதிலும், விஐபி தரிசன வழியாக இவர்கள் ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியேறினர். ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் இந்த மூன்று ஸ்டார்களை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

புது கூட்டணி
அரசியலை விட இதென்ன வித்தியாசமான கூட்டணியாக இருக்கிறதே என இந்தியாவில் உள்ள அத்தனை மீடியாக்களும், மக்களும் குழம்பினர். அதற்கு விடை மாலையில் தெரிய வந்துவிட்டது.

கேரளா முதல்வருடன் சந்திப்பு
திருப்பதியில் இருந்து அடுத்த பிளைட்டில் திருவனந்தபுரம் சென்ற இந்த கூட்டணி தலைவர்கள், அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் அணி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் விளையாடும் கேரள அணியான கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் அணியின் உரிமையாளர்கள் கூட்டணிதான் அணியின் வெற்றிக்காக ஏழுமலையானை தரிசனம் செய்து உள்ளனர்.

கால்பந்து அணி உரிமையாளர்கள்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) முதலீட்டாளர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர் இணைந்து உள்ளனர். எனவேதான் இந்த கூட்டணி திருப்பதி ஏழுமலையானை வணங்கியுள்ளனர்.

சர்வதேச கால்பந்து வீரர்கள்
கேரளாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச தரத்திலான கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே கேபிஎப்சி-யின் முக்கிய நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இதன் பணிகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின்.

கூட்டணி செல்ஃபி
அதேநேரத்தில் சிரஞ்சிவியின் மகன் ராம்சரண் தனது முகநூலில் இவர்களின் குரூப் செல்பியை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கேரள டீம் ஆந்திராவில் பூஜை செய்திருக்கிறார்கள் என்ற ரகசியம் மாலையில் தெரியவந்தது.


Click it and Unblock the Notifications