சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினார்,. அவர் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆமை வேகத்தில் ஆடிய நிலையில் ரிஷப் பண்ட் டி20 போட்டி போல ஆடியதை சுட்டிக்காட்டி சச்சின் டெண்டுல்கர் அவரை பாராட்டி இருக்கிறார்.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. இந்த மைதானத்தில் ரன் குவிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி 78 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அந்த நிலையிலும் ரிஷப் பண்ட் அதிரடியாக ரன் சேர்த்தார். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தினார். அவர் தனது ஆட்டத்தில் நான்கு சிக்ஸ் மற்றும் ஆறு ஃபோர் அடித்தார். அதன் மூலம் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் 184 என்பதாக இருந்தது. இந்த போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் சராசரியாக 50 என்பதாக மட்டுமே இருந்தது. அதை சுட்டிக்காட்டி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், "மற்ற பேட்ஸ்மேன்கள் 50 அல்லது அதற்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருக்கும் பிட்ச்சில், ரிஷப் பண்ட் 184 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருப்பது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம். முதல் பந்தில் இருந்தே அவர் ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார். அவர் பேட்டிங் ஆடுவதை பார்ப்பது எப்போதும் விறுவிறுப்பாகவே இருக்கும். இது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இன்னிங்ஸ்." என்று பாராட்டி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.