மும்பை: விராட் கோலி தனது மகத்தான பேட்டிங் சாதனைகளை முறியடிப்பார் என சச்சின் டெண்டுல்கர் கணித்து தம்மிடம் கூறியதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்தார். BCCI நிர்வாகியாக சச்சின், கோலி இருவரின் கிரிக்கெட் பயணங்களையும் நெருக்கமாகக் கண்ட சுக்லா, 2013-ல் சச்சின் ஓய்வு அறிவிக்கும் முன்பதாக தம்மிடம் பேசியதை தற்போது அவர் கூறியுள்ளார்.
சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ய, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாட அவரை சம்மதிக்க வைக்க முயன்றதாகவும் கூறினார். ஆனால், சச்சின் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இந்த முயற்சி குறித்து சுக்லா கூறுகையில், "கிரிக்கெட் வீரராக அவர் செய்தவை மிகவும் கடினமானவை. அவருக்கு யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் விரும்பியிருந்தால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடியிருக்கலாம்," என்றார்.
சச்சினின் மன உறுதியை விவரித்த அவர், "குறைந்தபட்சம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ய அவரிடம் சொன்னேன். அதற்கு அவர், 'இல்லை ராஜு பாய், நான் இப்போது விலக வேண்டும் என்று உணர்கிறேன்.' மிக நேர்மையாக, 'விளையாட்டுக்கு 100 சதவீதம் கொடுக்க முடியாது என்று நான் உணர்ந்த நாள், நான் அதை விட்டுவிடுவேன். நான் விலகிவிடுவேன்,' என்றார். அவர் அதையே செய்தார்," என சுக்லா குறிப்பிட்டார்.
மேலும், சச்சின் தனது ஓய்வு முடிவை தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாகவும், பலமுறை கோரியும் அதை மாற்றிக்கொள்ள மறுத்ததாகவும் சுக்லா கூறினார். "அவர் எனக்கு அழைப்பு விடுத்து, தனது ஓய்வை அறிவிக்கப் போவதாகச் சொன்னார். அதைச் செய்ய வேண்டாம், ஒரு வருடம் காத்திருக்குமாறு நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர், 'இல்லை, நான் ஓய்வு பெறுவேன் என்று நினைக்கிறேன்,' என்று கூறி ஓய்வு பெற்றார்," என சுக்லா நினைவு கூர்ந்தார்.
சச்சின் டெண்டுல்கர், 2013 நவம்பரில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உள்ளூர் தொடரில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். தனது இறுதி இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக விடைபெற்றார். 664 போட்டிகளில் 34,357 ரன்கள், 100 சதங்கள், 164 அரைசதங்கள் என அவரது சாதனைகள் நீண்டவை. 2011ல் சொந்த மண்ணில் வென்ற உலகக் கோப்பையும் அவரது சாதனைகளில் ஒன்று.
சச்சினுக்குப் பதிலாக வேறு யாரேனும் வருவார்களா என்று சுக்லாவிடம் கேட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், இதே கேள்வியை நான் சச்சினிடம் கேட்டேன். அப்போது "சாதனைகள் முறியடிக்கப்படவே உருவாக்கப்படுகின்றன," என்று பதிலளித்து, விராட் கோலிதான் அதைச் செய்யக்கூடியவர் என்று சச்சின் சொன்னதாக சுக்லா தெரிவித்தார்.
அந்த நம்பிக்கை பெருமளவில் உண்மையாகியுள்ளது. விராட் கோலி, குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சச்சினின் பல சாதனைகளை முறியடித்துள்ளார். 54 ஒருநாள் சதங்களுடன் (சச்சினின் 51 சதங்களை முந்துகிறார்) அதிக ஒருநாள் சதங்கள் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். மேலும், 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து, சச்சினின் சாதனையை முறியடித்தார்.
டெஸ்ட்டில் எதிர்பார்த்த உயரத்தை அடையாவிட்டாலும் (123 போட்டிகளில் 9,230 ரன்கள்), ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட 19,000 ரன்கள், 55 சதங்கள், ஐசிசி கோப்பை, தனிப்பட்ட விருதுகள் என கோலி உலகின் தலைசிறந்த வெள்ளை நிற பந்து பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன தீர்க்கதரிசனம் இதன் மூலம் நிறைவேறியுள்ளது.