
அவர் வழி தனி வழி
சச்சின் டெண்டுல்கர் Playing It My Way என்ற பெயரில் சுயசரிதையை எழுதியுள்ளார். அதில்தான் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலைப் போட்டுத் தாளித்து எடுத்துள்ளார்.

சேப்பல் இகழப்பட வேண்டியவர்தான்!
கிரேக் சேப்பல் காலத்தில்தான் இந்திய அணி ரொம்பக் கேவலமாக ஆடியது. அதில் யாருக்குமே சந்தேகம் கிடையாது. அவரது பயிற்சிக்காலத்தில் இந்திய அணிக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள், குழப்பங்கள். வீரர்கள் ஒருபக்கம், சேப்பல் மறுபக்கமாக பிரிந்து நின்ற கொடுமையான காலம் அது.

சீனியர்களுக்கு ஆப்பு வைக்கப் பார்த்தார் சேப்பல்
சீனியர் வீரர்களுக்கு ஆப்படிக்கப் பார்த்தார் சேப்பல் என்பது சச்சினின் ஒரு குற்றச்சாட்டு. டிராவிடை கேப்டன் பதவியிலிருந்து தூக்கி விடுவோம். நீங்கள் கேப்டனாகுங்கள். நம்மை யாரும் அசைக்க முடியாது என்று தன்னிடம் சேப்பல் நூல் விட்டதாக கூறியுள்ளார் சச்சின். அப்போது சச்சினின் மனைவி அஞ்சலியும் உடன் இருந்தாராம்.

அப்படியே ஷாக்காயிட்டேன்
சேப்பல் சொன்னதைக் கேட்டு அப்படியே தான் ஷாக் ஆகி விட்டதாக கூறியுள்ளார் சச்சின். மேலும் மூத்த வீரர்களை அணியிலிருந்து தூக்கவும் சேப்பல் முயன்றதாகவும் கூறியுள்ளார் சச்சின். சேப்பல் நல்ல பயிற்சியாளராகவே இல்லை என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.

ஆமா.. ஆமா..
சச்சினின் இந்தக் கூற்றை சேப்பல் உடனடியாக மறுத்து விட்டார். ஆனால் முன்னாள் வீரர்களான வி.வி.எஸ்.லட்சுமண், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகியோர் உண்மைதான் என்று ஆமோதித்துள்ளனர்.

இதெல்லாம் நல்லதுக்கா
எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். தற்போது சச்சின் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுக்களால் என்ன நல்லது நடந்து விடப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே வேலையாப் போச்சு
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பிரபலங்கள் எல்லோருமே இப்படித்தான் எதையாவது சர்ச்சையாக எழுதி பரபரப்பைக் கிளப்புவது பேஷனாகியுள்ளது. அதில் சச்சினும் இடம் பெற்றுள்ளார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

சாந்தமாக மட்டுமே பேசிய சச்சின்
சச்சின் கிரிக்கெட் விளையாடி வந்த காலத்தில் ஒருமுறை கூட சர்ச்சைக்கிடமாக பேசியதே இல்லை. யாரையும் குற்றம் சாட்டியதே இல்லை. ஏன் சேப்பல் பற்றி ஊரே காரித் துப்பிய போதிலும் கூட சச்சின் மட்டும் "ஸ்மைலிங் ப்ளீஸ்" மனோபாலா முகத்துடன்தான் வலம் வந்தார். ஒரு பேச்சு கூட சேப்பலைக் குற்றம் சாட்டி அவர் பேசியதில்லை.

இப்ப மட்டும் ஏன் இப்படி
ஆனால் இப்போது அவரது கேரக்டருக்கு முற்றிலும் நேர் மாறாக இருக்கிறது அவரது கடுமையான குற்றச்சாட்டுக்கள். பழையை புண்ணைக் கிளறிப் பார்த்துள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆதாரம் இருக்கா
நாம் சொன்னால் அதை எல்லோரும் நம்பி விடுவார்கள் என சச்சின் நினைக்கிறாரா.. அவர் சொல்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பதை அவர் சொல்ல முன்வருவாரா...அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவர் மிஸ் யூஸ் செய்கிறாரா..

ஏன் அப்போது அமைதி காத்தார்
சேப்பல் இவ்வளவு அக்கிரமம் செய்துள்ளார் என்பது அவருக்கு முன்பே தெரிந்திருந்தால் அதை ஏன் அவர் அப்போதே சொல்லவில்லை. அப்போது சொல்லியிருந்தால், சேப்பலை அப்போதே கிண்டி கிழங்கெடுத்திருக்கலாமே.. சேப்பலின் தலைமையின் கீழ் இந்தியா சந்தித்த பல தோல்விகளைத் தவிர்த்திருக்கலாமே.. அதை ஏன் சச்சின் அப்போது செய்யவில்லை.

ஏன் உடந்தையாக இருந்தார்
இந்திய கிரிக்கெட்டுக்கு எதிராக சேப்பல் சதி செய்தார் என்றால், அதற்கு தன்னையும் உடந்தையாக இருக்க அழைத்தார் என்றால் அதை ஏன் சச்சின் அப்போதே அம்பலப்படுத்தவில்லை.. உண்மையான கிரிக்கெட் வீரர் அதைத்தானே செய்திருப்பார்.. என்ற கேள்வி எழுகிறது.

இம்புட்டு வருஷம் மறைத்தது ஏன்
சேப்பலின் சேஷ்டைகள் குறித்து இத்தனை காலமும் அமுக்குனி மாதிரி இருந்து விட்டு இப்போது போட்டு உடைக்க என்ன காரணம்.. அப்படியானால் இதுவும் கூட ஒரு வகையில் சுயநலம்தானே...

மோசமான கேப்டன்
உண்மையில் இந்திய அணி கண்ட மோசமான கேப்டன்கள் பட்டியலில் சச்சினுக்கு முக்கியமான இடம் உண்டு. ஒரு கேப்டனாக இவர் ஜொலித்ததே இல்லை. மாறாக மோசமான தோல்விகளை அதிகம் சந்தித்தவர் சச்சின். அப்படிப்பட்ட சச்சினைப் போயா சேப்பல் கேப்டனாக்க முயற்சித்திருப்பார்.. சந்தேகம் வருதே!

சச்சினுக்கு டிராவிட் பெட்டராச்சே
மேலும் அப்போது சச்சினை விட டிராவிடின் கேப்டன் சாதனை சற்று மேம்பட்டதாகவே இருந்தது. இருவரும் தலா 25 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளனர். இதில் டிராவிட் 8 வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சச்சினோ 4ல்தான் வென்றுள்ளார். ஒரு நாள் போட்டியிலும் இதே கதைதான். டிராவிட் 79 போட்டிகளில் 42ல் வென்றுள்ளார். சச்சினோ 73 போட்டிகளில் 23ல் மட்டுமே ஜெயம் கண்டவர்.

சச்சினைப் பகடைக் காயாக பயன்படுத்தப் பார்த்தவர் சேப்பல்
எனவே சச்சினைப் போய் அவர் கேப்டனாக்க முயற்சித்தார் என்றால், உண்மையில் சச்சின் மூலமாக இந்திய கிரிக்கெட்டையே நாசப்படுத்தப் பார்த்துள்ளார் சேப்பல் என்பதே உண்மையாகும். இந்த உண்மையைக் கூடவா சச்சினால் உணர முடியாமல் போய் விட்டது.. இவ்வளவு லேட்டாகவாக அவர் உணர்வார்.. இதுதான் சச்சின் "டக்"கா....!

சேப்பலை எதிர்த்துப் போராடியவர் கங்குலி மட்டுமே
உண்மையில் சேப்பலுக்கு எதிராக பகிரங்கமாக போராடியவர் கங்குலி மட்டுமே. அப்போது அவருக்கு பகிரங்கமாக எந்த வீரரும் ஆதரவு தெரிவிக்கவில்லை - சச்சின் உள்பட. கங்குலிக்கு சச்சின் அப்போது ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால் அதை அவர் அப்போது செய்யவில்லை. அதுதான் பாலிட்டிக்ஸ்!

சச்சினைக் காக்க பாடுபட்டவர் கங்குலி
மேலும் சச்சின் பார்மில் இல்லாதபோது அவரைக் காக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதையெல்லாம் செய்தவர் கங்குலிதான். கங்குலி தலைமையில் இந்திய பல முக்கியமான வெற்றிகளைப் பெற்றது. அப்போதெல்லாம் சச்சின் உதவி என்பது குறைவுதான்.

மெல்போர்ன் போட்டியின்போது
2004ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது சச்சின் பார்மில் இல்லை. இதனால் அவரைக் காக்க 2வது இன்னிங்ஸில் அவருக்கு முன்பு தான் போய் பேட் செய்தார் கங்குலி. ஆனால் இதே கேப்டன் கங்குலி சேப்பலுடன் பகிரங்கமாக மோதலில் ஈடுபட்டபோது கங்குலிக்காக குரல் கூட கொடுக்கவில்லை சச்சின்.

அப்பவே மாட்டி விட்டிருக்கலாம்ல...!
சச்சின் நினைத்திருந்தால் சேப்பலின் சதி வேலைகளை அம்பலப்படுத்தி இந்திய கிரிக்கெட்டையும், கங்குலியையும் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லையே.. ஏய்யா ராசா செய்யலை!

வெத்துப் பரபரப்புக்காகவா....
எனவே இப்போது சச்சின் கூறியுள்ளதையெல்லாம் பார்க்கும்போது தனது புத்தகம் நன்றாக விற்க வேண்டும், காசு வந்து குவிய வேண்டும், என்ற வெற்று பரபரப்புக்காகவும், வியாபாரத்திற்காகவுமா என்ற கேள்வியும் எழுகிறது.

டிராவிட்டுக்கும் சேர்த்து ஆப்பு வைக்கிறாரா சச்சின்
இன்னொரு சந்தேகமும் வருகிறது. 2004ம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் போட 6 ரன்களே தேவையாக இருந்தது. ஆனால் கேப்டனாக இருந்த டிராவிட் டிக்ளேர் செய்து விட்டார். இது சச்சினுக்கு அதிர்ச்சி அளித்தது. எனவே இதை மனதில் வைத்து டிராவிடை விட தன்னைத்தான் சேப்பல் அதிகம் நம்பினார் என்று காட்டி டிராவிடையும் வாரி விட முயற்சிக்கிறாரா சச்சின் என்ற கேள்வியும் எழுகிறது.
மொத்தத்தில் சச்சினின் இப்போதைய "டிக்ளரேஷன்" முற்றிலும் நியாயமானதாக தெரியவில்லை...!
F


Click it and Unblock the Notifications











