பாட்னா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் என். சீனிவாசனின் வலியுறுத்தலை அடுத்து தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்று பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா தெரிவித்துள்ளார்.
ஐபில் பெட்டிங்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கியது தொடர்பாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் சீனிவாசன் வாரியத் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றால் தாங்கள் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுப்பேற்கக் கூடாது என்றது.

இதையடுத்து ஆதித்யா வர்மா கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் சொந்த சண்டை அல்ல. கடந்த 13 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பீகாருக்கான சண்டை. சீனிவாசனின் வலியுறுத்தலால் தான் சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது. தேர்வாளர்கள் சச்சினிடம் பேசினார்கள். அப்படி தான் அவர் ஓய்வை அறிவித்தார்.
சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பெயரை கெடுத்துவிட்டார். நான் நீதிக்காக போராடுகிறேன் என்றார்.