சச்சினை சீக்கிரமே மக்கள் மறந்து விடுவார்கள்.. சொல்கிறார் மியான்டட்!
கராச்சி: புதிய தலைமுறை வீரர்கள் நிறையவே வந்து விட்டார்கள். எனவே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பின்னர் ரசிகர்கள் அவரை சீக்கிரமே மறந்து விடுவார்கள். அதுதான் துணைக் கண்டத்து ரசிகர்களின் இயல்பு.. அதுதான் எதார்த்தம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட்.
தனது ஓய்வை சச்சின் தொடங்கியதுமே அவரை ரசிகர்கள் மறக்கத் தொடங்கி விடுவார்கள். மற்ற இளம் வீரர்கள் மீது அவர்களது கவனம் போய் விடும் என்றும் மியான்டட் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் என துணைக் கண்டத்து ரசிகர்கள் எப்போதுமே அப்படித்தான் என்றும் பேசியுள்ளார் மியான்டட். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்...

புதியவர்கள் நிறைய இருக்கிறார்கள்
புதிய வீரர்கள், இளம் வீரர்கள், திறமையானவர்கள் நிறைய இருக்கிறார்கள். எனவே சச்சினை ரசிகர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள். சீக்கிரமே மறந்து விடுவார்கள். அதுதான் இயல்பு, எதார்த்தம்.

ரொம்ப நாள் ஆடினால் அப்படித்தான்
எந்த ஒரு வீரராவது நீண்ட காலத்திற்கு ஆடி வந்தால் அவரை படு வேகமாக மக்கள் மறந்து விடுவார்கள். இது துணைக் கண்டத்து ரசிகர்களின் இயல்பாகும்.

சீக்கிரமே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்
சச்சின் சீக்கிரமே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அப்போதுதான் இளம் வீரர்களின் வருகை குறைந்த நிலையில், சச்சினை ரசிகர்கள் மிஸ் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இப்போது திறமையான வீரர்கள் பலரை இந்தியா கண்டுபிடித்த நிலையில் அவர் விடைபெறுகிறார்.

பாராட்டுக்குரியவர் சச்சின்
சச்சினின் கடைசிப் போட்டியையொட்டி ரசிகர்களும், மற்றவர்களும் அவரைப் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு முழுத் தகுதியும் படைத்தவர் சச்சின் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த மரியாதை, பாராட்டு, புகழாரத்திற்குப் பொருததமானவர்தான் சச்சின்.

இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்
இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பெருமைத் தேடித் தந்தவர் சச்சின். நிறையச் செய்துள்ளார். நவீன கிரிக்கெட்டில் அவர் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகமில்லை.

சச்சின் மாதிரி விளையாடுங்க
இளம் தலைமுறையினருக்கு நான் நிச்சயம் சச்சினை நல்ல ரோல்மாடலாக காட்டுவேன். அனைத்து நாட்டு வீரர்களுக்கும் சச்சின் சிறந்த ரோல் மாடல் என்பதில் சந்தேகமே இல்லை என்றார் மியான்டட்.


Click it and Unblock the Notifications