இந்த தமிழக பவுலருக்கு இந்தியா ஏ அணியில் கூட இடமில்லை.. 5 போட்டியில் 24 விக்கெட் எடுத்தும் ஏமாற்றம்
மும்பை: விரைவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியா ஏ அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சாய் கிஷோர் ஆல்ரவுண்டராகவும் செயல்படுவார் எனும் நிலையில், அவருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஆண்டு அவர் ரஞ்சி டிராபியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிகவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும், அவர் தமிழ்நாடு அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார். எனவே, அவரது அனுபவம் மற்றும் ஆளுமை ஆகியவற்றுடன், அவர் தற்போது விக்கெட் வீழ்த்தி வரும் விதத்தையும் கணக்கில் கொண்டு, அவருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இந்திய டெஸ்ட் அணியில் மாற்று சுழற்பந்துவீச்சாளராகவும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவருக்கு இந்தியா ஏ அணியிலேயே வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. சாய் கிஷோர் கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் 5 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால், தற்போது ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதர் ஆகிய இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களிடம் தனது இடத்தை இழந்துள்ளார். அவர்கள் இருவரும் இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்.
அதே சமயம் மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார். அவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்து, துவக்க வீரராக விளையாடி வருகிறார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரிலும் அவர் சிறப்பாக ரன்கள் குவித்திருந்தார். அதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் சர்ரே அணியில் இடம் பிடித்து ரன்கள் குவித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே
குறிப்பு: சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார்கள்.


Click it and Unblock the Notifications