ஹாங்சோ: வங்கதேசம் அணிக்கு எதிரான ஆசிய போட்டிகள் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 97 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிய போட்டிகளின் கிரிக்கெட் பிரிவு ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி பதக்கத்தை உறுதி செய்யும் என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த அணியில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக களமிறக்கப்பட்டார். இதனால் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் பவர் பிளே ஓவர்களிலேயே தமிழக வீரர்களான சாய் கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர்.
சாய் கிஷோர் வீசிய 5வது ஓவரிலேயே வங்கதேச அணியின் ஹசன் ஜாய் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 6வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கேப்டன் சைஃப் ஹசன் மற்றும் ஜாகிர் ஹசன் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஹொசைன் 7 ரன்களிலும், ஷஹாதத் ஹொசைன் 5 ரன்களிலும் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் வங்கதேச அணி 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ரவி பிஷ்னாய் மற்றும் ஷபாஸ் அஹ்மத் ஆகியோரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட, அவர்களும் விக்கெட்டை வீழ்த்தினர். கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் ஜாகிர் அலி மட்டும் போராடி 24 ரன்களை சேர்த்தார். மீதமுள்ள வீரர்கள்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. தமிழக வீரர்கள் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.