ஹாங்சோ : தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். நேபாள அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அவர் அறிமுகம் ஆனார்.
அவர் இந்தியாவுக்காக ஆட பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர் கனவு நிறைவேறாத நிலையில், இந்த போட்டியில் அதிகாரப்பூர்வமாக இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகம் ஆனார்.

தான் அறிமுகம் ஆவதை நினைத்து அவர் கண் கலங்கிய புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் தொடர் சேர்க்கப்பட்டது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் நேரடியாக காலிறுதிப் போட்டிகளில் ஆடும் என அறிவிக்கப்பட்டது.
மற்ற கத்துக்குட்டி அணிகள் தகுதிச் சுற்றில் ஆடி, காலிறுதிக்கு முன்னேறின.
இந்திய ஆண்கள் அணி உலகக்கோப்பை தொடரில் ஆட இருப்பதால், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் ஆடிய இளம் வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பியது பிசிசிஐ.
அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் கிஷோரும் இடம் பெற்று இருந்தார். மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இதில் இடம் பெற்று இருந்தார்.
இந்தியா - நேபாள அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணியில் களமிறங்கிய 11 வீரர்களில் இரண்டு தமிழக வீரர்களும் இடம் பெற்றனர். அதில் சாய் கிஷோருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டி.
போட்டிக்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சாய் கிஷோர் கண் கலங்கினார். அந்த புகைப்படத்தை எடுத்து ரசிகர்கள் இணையத்தில் பரப்பினர். பலரும் அவரது சர்வதேச அறிமுகத்துக்கு வாழ்த்து கூறினர்.
நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற் பந்துவீச்சாளரான சாய் கிஷோர் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதுவே சர்வதேச போட்டிகளில் அவரின் முதல் விக்கெட்.
நேபாள அணியின் துவக்க வீரர் குஷால் புர்டேல் விக்கெட்டை தான் அவர் வீழ்த்தினார். இந்திய அணி முதல் 8 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்த நிலையில், அணிக்கு திருப்பம் கொடுக்கும் வகையில் விக்கெட் வீழ்த்தினார் சாய் கிஷோர். அவரது சிறப்பான செயல்பாட்டுக்கும் சேர்த்தே பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.