“கிளவுஸில் பசை தடவிக் கொண்டு ஆடுங்க”.. சாய் சுதர்சனை வறுத்து எடுத்த சேவாக்.. 2 முறை அதே தவறு
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், அவர் ஆட்டமிழந்த விதம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் 'ஹிட் விக்கெட்'
சாய் சுதர்சன் அடுத்தடுத்து இரண்டு முக்கியமான பிளே-ஆப் போட்டிகளில் 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியின் போது, மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 'ஹிட் விக்கெட்' முறையில் அவர் வெளியேறினார்.

அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியிலும் நடந்தது. இதில் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்த சாய் சுதர்சன், ஷாட் அடிக்கும்போது கையில் இருந்து பேட் நழுவி ஸ்டம்பில் பட்டதால் மீண்டும் 'ஹிட் விக்கெட்' ஆனார். ஒரே மாதிரியான தவறைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அவர் செய்திருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சேவாக் விளாசல்
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் கிண்டலாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "சாய் சுதர்சனுக்கு இனி 'ஸ்டிராடஜிக் டைம்-அவுட்' நேரத்தின் போது பேட்டில் தடவ பசை கொண்டு வர வேண்டும். கையுறையில் பசையைத் தடவிக்கொண்டால் பேட் அவரது கையை விட்டு நழுவாது. ஒரே தவறை எப்படித் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் செய்ய முடியும்? ஒரு வீரர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் இவர் கற்கவில்லை. எனது நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததில்லை" என வறுத்தெடுத்தார்.
யாரும் கணிக்காத குஜராத்
அதே சமயம், குஜராத் அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை சேவாக் வெகுவாகப் பாராட்டினார். "இந்த சீசன் தொடக்கத்தில் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு வரும் என்றோ அல்லது பிளே-ஆப் சுற்றுக்குக் கூட வரும் என்றோ எங்களில் யாரும் கணிக்கவில்லை. அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் மட்டுமே உள்ளனர் என்று பலரும் விமர்சித்தனர். ஆனால், அவர்கள் பவர் பிளே ஓவர்களில் எவ்வித பதற்றமும் இல்லாமல், தேவையில்லாத ஆபத்தான ஷாட்டுகளை ஆடாமல் ரன்களைக் குவிக்கின்றனர். அவர்களின் இந்தத் திட்டமிட்ட ஆட்டம் தான் அவர்களை மீண்டும் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது" எனத் தெரிவித்தார்.
தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. முக்கியமான அந்தப் போட்டியில் சாய் சுதர்சன் தனது பேட்டிங் யுத்தியில் மாற்றம் செய்து, இது போன்ற தவறுகளைத் தவிர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications
