சென்னை: சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர், தமிழகத்தின் இளம் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன். 2025 ஐபிஎல் தொடரில் தனது நேர்த்தியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து, வளர்ந்து வரும் வீரர் விருதையும், அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியையும் தட்டிச் சென்றார்.
அதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து இரண்டு கிரிக்கெட் தொடர்களில் சாய் சுதர்சன் பெயர் இடம் பெறவில்லை.

காயம், ஓய்வு என எந்த காரணமும் குறிப்பிடாமல் சாய் சுதர்சன் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் அணிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்தியாவின் முக்கிய உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான துலீப் டிராபிக்கான தெற்கு மண்டல அணியில் சாய் சுதர்சன் பெயர் இடம்பெறவில்லை. திலக் வர்மா தலைமையிலான அந்த அணியில், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா போன்ற இந்திய அணி வீரர்கள் சிலருக்கும் இடம் கிடைக்கவில்லை.
இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 8 அன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) புச்சி பாபு அழைப்புத் தொடருக்கான இரண்டு அணிகளை அறிவித்தது. இது உள்ளூர் சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும் பாரம்பரியமான போட்டியாகும். ஆனால், டிஎன்சிஏ லெவன் மற்றும் டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் ஆகிய இரண்டு அணிகளிலுமே சாய் சுதர்சனின் பெயர் இடம்பெறவில்லை என்பதுதான் பேரதிர்ச்சி.
செப்டம்பரில் நடைபெறவிருக்கும் டி20 ஆசியக் கோப்பைக்கு வீரர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், துலீப் டிராபிக்கான வடக்கு மண்டல அணியில் சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களும் ஆசியக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்களால் இரண்டு தொடர்களிலும் விளையாட முடியும் போது, சாய் சுதர்சனால் முடியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் தொடரில், சாய் சுதர்சன் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். வெளிநாட்டுச் சூழலில் சிவப்புப் பந்து கிரிக்கெட்டுக்கு அவர் இன்னும் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இது காட்டியது. அப்படியிருக்க, அவருக்கு அதிக அளவில் சிவப்புப் பந்து போட்டிகளில் வாய்ப்பு அளிப்பதுதான் சரியாக இருக்கும்.
ஆனால், அவரை உள்ளூர் போட்டிகளில் இருந்து ஒதுக்குவது அவரது வளர்ச்சிக்கு உதவுமா என்பது சந்தேகமே. ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரு வீரர், அடுத்தடுத்து உள்ளூர் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.