கோவை : TNPL எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது. இதன் மூலம் கோவை அணி சீஸனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஐபிஎல் சூப்பர் ஸ்டார் சாய் சுதர்ஷன் டிஎன்பிஎல் தொடரில் தனது 10வது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
45 பந்துகளில் 86 ரன்கள் குவித்து சாய் சுதர்சன் அசத்தினார். இதில் 8 பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பக்கபலமாக நின்ற முகிலேஷ் 33 ரன்களும் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக்கான் 15 பந்தில் 25 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை திருப்பூர் தமிழன்ஸிற்கு விஜய் ஷங்கர் 3 விக்கெட்களும் கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்கள் எடுத்து லைகா கோவை கிங்ஸின் ஸ்கோரை 200 ஐ தாண்ட விடாமல் கட்டுப்படுத்தினர்.
இதனையடுத்து 180 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட திருப்பூர் தமிழன்ஸ் முதல் ஓவரிலேயே தங்களின் அனுபவ வீரரான சத்ருவேத்(4) விக்கெட்டை தாமரை கண்ணனிடம் இழந்தது. 2வது விக்கெட்டிற்கு துஷார் ரஹேஜா மற்றும் விஷால் வைத்யா சிறிது நேரம் தாக்குப்பிடித்து 37 ரன்கள் சேர்க்க, விஷால் வைத்யா(16)விக்கெட்டை வீழ்த்தி கோவை கேப்டன் ஷாரூக் கான் திருப்பூர் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் நட்சத்திரம் விஜய் ஷங்கர் வெறும் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க அதே ஓவரில் திருப்பூர் கேப்டன் சாய் கிஷோரும் 1 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர், திருப்பூர் தமிழன்ஸ் பேட்டர்கள் பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல் தங்களின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தவித்தனர்.
திருப்பூர் அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் துஷார் ரஹேஜா 33 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, அவரைத் தவிர மற்ற எந்த பேட்டர்களும் 20 ரன்களைக் கூட தொடமுடியாமல் ஆட்டமிழந்தனர். . ஒரு கட்டத்தில் 42 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த திருப்பூர் தமிழன்ஸ் அடுத்த 37 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து சரிந்தது.

இறுதியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் இந்த சீஸனின் முதல் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸிடம் படுதோல்வியடைந்தது. கோவை அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஷாரூக்கான் அதிகபட்சமாக 3 விக்கெட்களையும் டி.என்.பி.எல் தொடரின் அனுபவ வீரர் முகமது 2 விக்கெட்களையும் எடுத்து கோவையின் வெற்றியை உறுதி செய்தனர்.