கொழும்பு : வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை இந்திய ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசினார்.
கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி ,முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிஎஸ்கே வீரர் ஹங்கர்கேகர் அபாரமாக பந்துவீசி அசத்தினார்.

மேலும், ரியான் பராக், நிசாந்த் சிந்து ஆகியோர் சிறப்பாக விளையாடியும் கடும் நெருக்கடி கொடுத்தார். அதிகபட்சமாக காசிம் அக்ராம் 48 ரன்கள் எடுத்த நிலையில், ஹங்கர்கேகர் வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி 48 ஓவர் முடிவில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணியில் அபிஷேக் சர்மா 20 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் நிகின் ஜோஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

நிகின் ஜோஸ் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் யாஷ் துல் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய ஏ அணி 36.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியிலேயே இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சாய் சுதர்சன் இந்த தொடரில் சதம் மற்றும் அரைசதம் அடித்திருக்கிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரிலும் சாய் சுதர்சன் பட்டையை கிளப்பி உள்ளதால், இந்திய அணியில் நடப்பாண்டிற்குள்ளேயே சாய் சுதர்சனை பார்க்கலாம். இதே போன்று சிஎஸ்கே வீரர் ஹங்கர்கேகரும், தனது வேகப்பந்துவீச்சின் தரத்தை காட்டி இருக்கிறார். பேட்டிங்கிலும் அவர் ஒரு காட்டான் என்பதால், அடுத்த ஹர்திக் பாண்டியா நமக்கு கிடைத்து விட்டார். இது சிஎஸ்கே ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.