சென்னை: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில் சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்ட்டில் நீக்கப்பட்டது குறித்து புதிய விளக்கத்தை அளித்து இருக்கிறார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். மேலும், இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் என ஸ்ரீகாந்த் கூறினார்.
தெற்காசிய மைண்ட் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் செஸ் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவது பற்றி ஸ்ரீகாந்த் பேசினார்.

அப்போது சாய் சுதர்சனை ஏன் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: "வாஷிங்டன் சுந்தருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர் நம்ம ஊரு பையன். அவர் நல்ல பந்துவீச்சாளர், நல்ல ஆல்-ரவுண்டர். இந்த மாதிரி டெஸ்ட் தொடரை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 'வாடா மச்சான் வாஷிங்டன் சுந்தர், இந்த வாய்ப்பை பயன்படுத்து'" என்று வேடிக்கையாகச் சொன்னார் ஸ்ரீகாந்த்.
சாய் சுதர்சனுக்கு முதல் போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. அவரை நீக்கியது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த், "சாய் சுதர்சனை அவர்களாக நீக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முழங்கையில் ஏதோ காயம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். அவரை நீக்கி இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஏதேனும் காயம் பற்றி சுதர்சன் சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு போட்டி மட்டும் ஆடவைத்துவிட்டு அவரை நீக்கி இருந்தால், அது மிகவும் தவறானது. ஆனால், இது நீக்கியது போல எனக்கு தெரியவில்லை. இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வரவில்லை. ஒரு போட்டியில் மட்டும் ஆட வைத்துவிட்டு நீக்கினால் இது அநியாயம். சாய் சுதர்ஷன் சரியாக விளையாடவில்லை என நான் இப்போதே முடிவு சொல்ல முடியாது. அனைத்து வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும். அவர்கள் நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் மட்டுமே அவர்கள் என்ன செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும்'," என்றார் ஸ்ரீகாந்த்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் இல்லாத இந்திய அணி விளையாடி வருவது குறித்து பேசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், "இங்கு எல்லாமே பரிணாம வளர்ச்சிப் படிதான் செல்லும். எல்லாருக்கும் நேரம் உள்ளது. உங்களுக்கும் ஒரு நேரம் உள்ளது, எனக்கும் ஒரு நேரம் உள்ளது. நேரம் வந்தால் நாம் போக வேண்டியதுதான். நமது இடத்திற்கு வேறு ஒருவர் வருவார். அப்படித்தான் வாழ்க்கை. இந்தியா 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்," என்றார்.
மேலும், மைண்ட் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நிகழ்ச்சியைப் பற்றி பேசிய ஸ்ரீகாந்த், "இன்றைய அனைத்து விளையாட்டுகளும் மனம் சார்ந்த விளையாட்டுகளாக மாறி வருகின்றன. செஸ் மட்டும் இன்றி கிரிக்கெட்டும் இன்று மனம் சார்ந்த விளையாட்டாக மாறி இருக்கிறது. ஒரு கேப்டன் என்பவர் எதிரணியை எப்படி சமாளிப்பது? பேட்டிங் செய்பவர் எதிரணியை எப்படி சமாளிப்பது? எந்த பந்தை அடிப்பது என யோசிக்க வேண்டும். இது எல்லாமே மைண்ட் கேம் தான். ஃபீல்டிங் நிறுத்துவதும் மைண்ட் கேம் தான். பந்துவீச்சாளர்களை மாற்றுவதும் மைண்ட் கேம் தான். எல்லாமே மைண்ட் கேம் தான்," என்று தனது கருத்தை பதிவு செய்தார் ஸ்ரீகாந்த்.