ராஜ்கோட்: இராணி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் விளாசி அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல், இந்தியா ஏ, டிஎன்பிஎல், தியோதர் டிராபி என்று விளையாடிய அத்தனை கிரிக்கெட் தொடர்களிலும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் ஆடிய ருத்ரதாண்டவம் அவரை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளது. மிடில் ஆர்டர், தொடக்க வீரர் என்று எந்த பேட்டிங் வரிசையில் களமிறக்கினாலும் இவரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.

அண்மையில் இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக அறிமுகமானார் சாய் சுதர்சன். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் முதல் இன்னிங்ஸிலேயே 73 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்திய அணியின் ஜெர்சியை அணிவதற்கு முன்பாக இங்கிலாந்து மண்ணில் சாய் சுதர்சன் அசத்தியிருக்கிறார்.
இதனால் சாய் சுதர்சன் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்ற நம்பிக்கை தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இராணி கோப்பையில் செளராஷ்டிரா அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி களமிறங்கியது. இதில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் தொடக்க வீரராக சாய் சுதர்சன் களமிறக்கப்பட்டார்.
மயங்க் அகர்வால், கேப்டன் ஹனுமா விஹாரி, சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினாலும், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தினார். 164 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 7 பவுண்டரிகள் உட்பட 72 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.
சாய் சுதர்சனின் அபாரமான ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 90 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 72 ரன்கள் சேர்த்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக நம்பர் 3, டிஎன்பிஎல் தொடரில் நம்பர் 3, சர்ரே அணிக்காக நம்பர் 4, தற்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக தொடக்க வீரர் என்று எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்கினாலும் சாய் சுதர்சன் தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.