லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியில் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் மற்றும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள சாய் சுதர்சன், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டிலும் சர்ரே அணிக்காக அணிக்காக ஆடியுள்ளார்.
இந்த நிலையில், , சர்ரேயில் கிரிக்கெட் இயக்குநராக அலெக் ஸ்டீவர்ட் இருந்தபோது, தாம் சாய் சுதர்ஷனின் திறமையை கண்டதாகவும், அவர் இங்கிலாந்து மைதானங்களுக்கு ஏற்ப பந்துகளை எதிர்கொண்டு விளையாடியதாகவும் கூறினார்.

இது குறித்து பேசிய அவர்,"சாய் சுதர்சன், நாடு திரும்பி செல்லும்போது, எங்களிடமிருந்து சில டியூக்ஸ் கிரிக்கெட் பந்துகளை எடுத்துச் சென்றார். நான் அவரிடம் அதற்கு கட்டணம் எதுவும் கேட்கவில்லை.அவருக்கு வழங்கினேன். ஆனால், அவர் எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து இருக்கிறார். பிற்காலத்தில் இங்கிலாந்தில் விளையாட வாய்ப்பு வரும் என்பதை உணர்ந்து அந்தப் பந்துகளுடன் பயிற்சி செய்தார்.
அதனால், அவர் மீண்டும் சர்ரே அணிக்கு வரும்போது அல்லது இந்திய அணிக்காக இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு வரும் போது டியூக்ஸ் பந்துக்கு எதிராக நல்ல பயிற்சி பெற்றிருப்பார்," என்று ஸ்டீவர்ட் கூறினார்.
மேலும் சாய் சுதர்சனின் பேட்டிங் திறன் குறித்து பேசிய ஸ்டீவர்ட், "அவர் பந்தை தாமதமாக விளையாடுகிறார். இதன் காரணமாக பந்து சிறிது நிக் செய்தாலும், கேன் வில்லியம்சனைப் போல, பந்து ஸ்லிப்புக்கு முன்பே தரையில் விழுகிறது. இது சாயின் மிகப்பெரிய திறமையாகும்," என்று அவர் கூறினார்.
சுதர்ஷன் இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். இருப்பினும், இந்திய டெஸ்ட் அணிக்கு இதுவே முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் 2025-ல் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர், 29 முதல் தர போட்டிகளில் விளையாடி, 39.93 சராசரியுடன் 1957 ரன்கள் எடுத்துள்ளார்.