ராஞ்சி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க ஆகஸ்ட் 15ஆம் தேதியை தேர்வு செய்தது ஏன் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
2020, ஆகஸ்ட் 15.. இந்தியா முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைக்கட்டி இருந்த நிலையில், இரவு 7.45 மணியளவில் அனைத்து தொலைக்காட்சிகளும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தார் என்று செய்தியை ஒளிபரப்பின. பெரும்பாலும் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத தோனி, ஓய்வு முடிவை அறிவிப்பதற்காக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தினார்.

உடன் விளையாடிய வீரர்களுக்கு நன்றி கூறும் வகையில் அனைவரின் புகைப்படத்தையும் வீடியோவாக இணைத்து பின்னணியில் மேபால் டோபால் என்ற செண்டிமெண்ட் பாடலை ஒலிக்கவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கடைசியாக ஒருமுறை இந்திய அணி ஜெர்சியோடு தோன்றிவிடு தலைவா என்று கமெண்ட் செய்தனர்.
ஃபேர்வெல் போட்டியில் கூட தோனி விளையாட மறுத்துவிட்டார். கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தாமதமாக தொடங்கியிருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சென்னையில் வைத்து ஓய்வை அறிவித்தார் தோனி. இது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தோனி என்று வேண்டுமானாலும் ஓய்வை அறிவித்திருக்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிக்க ஆகஸ்ட் 15ஆம் தேதியை அறிவிக்க என்ன காரணம் என்று ரசிகர்கள் பலரும் குழம்பி போயிருந்தனர். இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி மூலமாக ரகசியம் வெளிவந்துள்ளது. தோனியின் தாய் தேவகி தேவியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 15ஆம் தேதியாகும். இதன் காரணமாகவே தாயின் பிறந்தநாளன்று ஓய்வை அறிவிக்கலாம் என்று தோனி முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
நேற்று சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் தாயும், தனது மாமியாருமான தேவகியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தோனி காத்து வைத்திருந்த ரகசியம் வெளிவந்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.