டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்தர் சேவாக்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்கள் இருவரின் சந்திப்பு எவ்வாறு நடைபெற்றது என்பது மிக சுவாரஷ்யமான கதை.
120 கோடி மக்களை கொண்ட இந்திய நாடு ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்கள் பெற்றதை கொண்டாடுவது அவமானகரமானது என்று இங்கிலாந்தின் பத்திரிகையாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில் கேலி செய்திருந்தார்.

அதற்கு கிரிக்கெட் வீரர் சேவாக், இந்தியர்கள் ஒவ்வொரு சிறு மகிழ்ச்சியையும் கொண்டாடுபவர்கள். கிரிக்கெட் போட்டியை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாதது தங்களுக்கு அவமானமாக இல்லையா என்று பதிலடி கொடுத்தார்.
இந்த கருத்து மோதல் டுவிட்டரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வீரேந்திர சேவாக்கின் துணிச்சலை பாராட்டி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அவரை நேரில் சந்திக்க நேரம் கேட்டார். உடனே, வீரேந்திர சேவாக்கும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
நேரத்தை குறிப்பிடுகிறேன், ஆனால் என்னுடன் சண்டையிட கூடாது என்று கிண்டலாக பதிவிட்டார் சேவாக். இதன்படி, இவர்கள் இருவரும் தற்போது நேரில் சந்தித்து பேசினர்
இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள வீரேந்திர சேவாக், நல்லதொரு வீராங்கனையை சந்தித்ததாகவும், நல்லவேளையாக, சாக்ஷி மாலிக் தன்னுடன் சண்டையிடவில்லை எனவும் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, சாக்ஷி மாலிக்கும், தனது டுவிட்டர் பக்கத்தில், வீரேந்திர சேவாக், பெருமைக்குரிய மனிதர் என்றும், அவரை சந்தித்தது மகிழ்ச்சியான சம்பவம் என்றும் கூறி, பதிவிட்டுள்ளார்.