எச்சிலை பயன்படுத்த தடைவிதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை ஐசிசி திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும்வகையில், பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடைவிதிக்க ஐசிசியின் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
ஐசிசி பரிந்துரைக்க கோரிக்கை
ஐசிசியின் இந்த பரிந்துரைக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும், ஐசிசியின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பௌலிங்கிற்கு போதிய முக்கியத்துவம் கிரிக்கெட்டில் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள அவர், எச்சில் பயன்படுத்த விதிக்கப்படும் இந்த தடைமூலம் பௌலர்களுக்கு மேலும் நெருக்கடிகள் நேரும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாற்றுடன் ஐசிசி இந்த முடிவை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சரியான திட்டமிடல் வேண்டும்
ஐசிசி சரியாக திட்டமிட்டால் டி20 உலக கோப்பை போட்டிகளை நடத்தலாம் என்றும் கம்பீர் கூறியுள்ளார். ஐசிசி, பிசிசிஐ உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் போர்டுகளும் ஒருங்கிணைந்து திட்டமிட்டால் டி20 உலக கோப்பையை நடத்தலாம் என்றும் அப்படி இல்லையென்றால் அது நடக்க சாத்தியம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திறனுக்கு பயிற்சி முக்கியம்
வீட்டில் முடங்கியுள்ள வீரர்கள் மீண்டும் போட்டிகள் துவங்கப்படும்போது தங்களது பிட்னெஸ் மற்றும் மனதை சிறப்பாக கொண்டு போட்டிகளை எதிர்கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தெரிவித்துள்ள கம்பீர், ஆனால், போட்டிகளை எதிர்கொள்ள தேவைப்படும் திறன் வெளியில் சென்று போதுமான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.