டி20 உலககோப்பையில், நமீபியாவுக்கு எதிராக ஆட்டமிழந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, வீரர்கள் இருக்கையில் பாட்டிலை வீசிய வீடியோ வைரலானது. இது, தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனுடன் ஏற்பட்ட சூடான விவாதம் என யூகிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை 2026இல் பாகிஸ்தான் நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், ஆகா-ஹெஸ்ஸன் இடையே நடந்த ஒரு சம்பவம் கவனத்தை ஈர்த்தது. கொழும்பில் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த ஆகா ஆட்டமிழந்தார். வீரர் இருக்கைக்குத் திரும்பிய அவர், பயிற்சியாளர் ஹெஸ்ஸனுடன் பேசியபோது, விரக்தியில் பாட்டிலை வீசும் காட்சி பதிவானது.

பாகிஸ்தான் அணியில் மோதல் நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆகா ஆட்டமிழப்பால் கோபத்தை வெளிப்படுத்தியதாக ஹெஸ்ஸன் விளக்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அந்த வீடியோவை எனக்கு அனுப்பினர்கள். நீங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்," என்றார்.
"நடந்ததை நான் விளக்கமளிக்கிறேன். இடதுகை பேட்ஸ்மேன் முகமது நவாஸை பேட்களை அணிந்துகொள்ளச் சொல்ல நான் சல்மானிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆகா ஆட்டமிழந்து வந்ததால் கோபத்தில் பாட்டிலை தரையில் எறிந்தார். அது நாங்கள் பேசியதற்கும் சம்பந்தமில்லை," என ஹெஸ்ஸன் கூறினார்.
"இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஓவர் முடிந்ததும், ஷதாப் கான் பேட்ஸ் அணிவது பற்றி பேசினோம். இது மிகச் சாதாரண உரையாடல், ஆகா பங்கேற்கவில்லை. ஆட்டமிழப்பால் ஏமாற்றத்துடன் நின்றிருந்த அவர், தற்செயலாக அங்கு இருந்தார். மக்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியம்,” என்றும் அவர் சேர்த்தார்.
பாகிஸ்தான் நெதர்லாந்து, அமெரிக்கா, நமீபியாவை வென்றது; இந்தியாவிடம் தோற்றது. சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. கொழும்பில் சனிக்கிழமை தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.அடுத்து பிப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தையும், அடுத்த வாரம் பிப்ரவரி 28 அன்று இலங்கையையும் முன்னாள் சாம்பியன்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.