கராச்சி: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவிடம் 15 நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை சரணடைந்தது பாகிஸ்தான் அணி. அந்த தோல்விகள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவின் பதவிக்கே வேட்டு வைத்துள்ளது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் சந்தித்த படுதோல்விகளைத் தொடர்ந்து, சல்மான் அகாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடர், பாகிஸ்தான் அணிக்கு ஒரு மறக்க முடியாத, அவமானகரமான தொடராக அமைந்தது. அந்தத் தொடரில், சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறியதோடு, இந்தியாவிடம் மூன்று முறை படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி, பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், ஒரு கட்டத்தில் 113/1 என்று வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 33 ரன்களைச் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து, 146 ரன்களுக்குச் சுருண்டது. குல்தீப் யாதவின் சுழலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர். குரூப் சுற்று போட்டி (செப். 14), சூப்பர் ஃபோர் சுற்று போட்டி (செப். 21) மற்றும் இறுதிப் போட்டி (செப். 28) என மூன்று முறையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது.
சல்மான் அகாவின் கேப்டன்சியின் கீழ், பாகிஸ்தான் அணி, வியூகம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலுமே திசை தெரியாமல் தடுமாறியது. ஒரு கேப்டனாக, அவரது சொந்த பேட்டிங் ஃபார்மும் படுமோசமாக இருந்தது. 7 இன்னிங்ஸ்களில் வெறும் 72 ரன்களை மட்டுமே, 12.00 என்ற சராசரியில் அவர் எடுத்தது, அணியில் அவரது இடத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஷோயப் அக்தர், அகமது ஷெஷாத் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள், சல்மான் அகாவின் தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "அணியின் பலவீனமான நபரே அவர்தான்" என்று அக்தர் சாடியுள்ளார்.
இந்தச் சூழலில், சல்மான் அகாவுக்குப் பதிலாக, ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் மீண்டும் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோள்பட்டை அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் ஷதாப் கான், நவம்பர் மாதத்திற்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துணை கேப்டனாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஷதாப் கான், 2026 டி20 உலகக் கோப்பைக்கு அணியைத் தயார்படுத்த சரியான தேர்வாக இருப்பார் என்று பிசிபி கருதுவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேப்டன்சி மாற்றம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. அவசரப்பட்டு முடிவெடுக்க விரும்பவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விரக்தியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம்.
ஒருவேளை கேப்டன்சி மாற்றம் நிகழ்ந்தால், நவம்பரில் இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள உள்ளூர் தொடரிலேயே, ஷதாப் கான் கேப்டனாக நியமிக்கப்படலாம். இது, 2026 டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் மறுகட்டமைப்பிற்கான முதல் படியாக அமையும். இந்தியாவிடம் அடைந்த தொடர் தோல்விகளின் வலி, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இதற்கு முன் 2023 ஆசிய கோப்பை மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தோல்விகளுக்கு பின் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.