இஸ்லாமாபாத்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் மூலம், தன் திறமையை உலகிற்கு பறைசாற்றும் வாய்ப்பு இந்திய வீரர் ஒருவருக்கு கிட்டியுள்ளதாக சல்மான் பட் கூறியுள்ளார். யாரைச் சொல்கிறார்?
டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ம் தேதி எதிர்கொள்கிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது.
போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், கடந்த செப்.8ம் தேதி வெளியான இந்திய அணியில் ரோஹித் சர்மா(wc) , விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தேர்வு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகக் கோப்பை அல்லது வேறு ஏதேனும் பெரிய தொடர்கள் இளைஞர்களுக்கு தங்களை நிரூபிக்க ஒரு பிரமாண்ட மேடையில் கிடைத்த வாய்ப்பாகும். அவர்கள் உலகக் கோப்பையில் தங்கள் அணிக்காக போட்டிகளை வெல்ல முடிந்தால், அவர்கள் நிச்சயமாக ஹீரோக்களாகவும், மக்கள் மனதிலும் இடம் பிடிக்க முடியும். உலகக் கோப்பையில் சாதித்தால், அவர்களது கிரிக்கெட் வாழ்க்கை அடுத்தக்கட்டத்திற்கு நகரும். சூர்யகுமார் யாதவ் ஒரு பிரம்மாண்ட மேடையில் தன்னை யார் என்று நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். அப்படி நிரூபித்துவிட்டால் அவரது லெவலே மாறிவிடும். சூர்யகுமார் யாதவ் மட்டுமல்ல, அவரைப் போன்று, மற்ற அணிகளில் இடம் பிடித்துள்ள திறமைசாலிகளின் வாழ்க்கையும் மாறிவிடும்" என்றார்.
அதே போல் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீர், "அவர் உங்களை அடுத்தடுத்து விளாசலாம், அவர் உங்களை late cut ஆடலாம், எக்ஸ்ட்ரா கவரில் உங்களை அடிக்கலாம், அவரால் அனைத்துவித ஷாட்ஸ்களையும் அடிக்க முடியும். குறிப்பாக அவர் நான்காம் நிலை வீரராக களமிறங்குகிறார். கிரிக்கெட்டில் இது மிகவும் முக்கியமான இடமாகும். அணியில் முதல் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்தாலும், சற்று வேகத்தை குறைக்காமல் அடித்து ஆட வேண்டிய ஒரு இடமாகும். அந்த இடத்துக்கு மிகப் பொருத்தமான ஒரே வீரர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே" என்று கூறியுள்ளார். இப்படி சூர்யகுமார் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. என்ன செய்யப் போகிறாரோ!!