கேப்டன் யார்?
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, இன்னும் ஃபுல் ஃபிட்னஸுடன் உள்ளார். அவர் எப்படியும் இன்னும் 8 - 9 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 3 வடிவ போட்டிகளையும் அவரால் தலைமை தாங்க முடியவில்லை என்றும், தனி தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களால் கோரப்பட்டு வருகிறது. இந்த கேள்வி தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இளம் வீரர்
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், அடுத்த கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார் என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பண்ட்-ன் உள்நாட்டு போட்டிகள் குறித்து அவ்வளவாக எதுவும் தெரியாது, ஆனால் ஐபிஎல் தொடரில் அவரின் ஆட்டத்தை பார்த்துள்ளேன். டெல்லி அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளதால், கண்டிப்பாக அவரை வைத்து பிசிசிஐ எதிர்கால திட்டங்களை வகுத்திருக்கும் எனக்கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர்
டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்தாண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதனால் இளம் வீரர் ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தை விட மிகச்சிறப்பாகவே அணியை வழிநடத்தியுள்ளார். அதற்கு உதாரணம் இந்தாண்டு ஐபிஎல்-ல் டெல்லி அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. தோனியின் சிஎஸ்கே, கோலியின் ஆர்சிபி அணிகள் 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது.
ரோகித்
பண்ட் மட்டும் அல்லாமல், ரோகித் சர்மா மற்றும் அஜிங்கியா ரஹானேவும் கேப்டன் பதவிக்கு சரியாக இருப்பார்கள் என சல்மான் பட் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவை ஒரு கேப்டனாக எனக்கு மிக பிடிக்கும். இக்கட்டான சூழல்களை சிறப்பாக கையாள்வார். அதே போல ரஹானே முடிவெடுப்பதில் சிறப்பாக விளங்குவார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை தேடி கொடுத்தார். எனவே இவர்களே எனது தேர்வு எனக்கூறியுள்ளார்.