பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது வாரிசை கிரிக்கெட் களத்தில் களமிறக்கியுள்ளார். ஏற்கனவே கர்நாடகா உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வந்த சமித் டிராவிட், இம்முறை முதல்முறையாக மகாராஜா டிராபி டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.
மைசூர் வாரியர்ஸ் அணிக்காக ரூ.50 ஆயிரத்திற்கு சமித் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் போட்டியில் களமிறங்கிய அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்த போது, அவர் அடித்த சிக்சர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற குல்பர்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதன்பின் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் கருண் நாயர் - சமித் டிராவிட் கூட்டணி இணைந்து சரிவில் இருந்து மைசூர் அணியை மீட்டது. இவர்கள் இருவரும் இணைந்து 49 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய கேப்டன் கருண் நாயர் 35 பந்துகளில் 3 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 66 ரன்களை விளாசினார்.
மறுபக்கம் சமித் டிராவிட் 24 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் 11வது ஓவரை வீச பிரவீன் துபே அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தை கூக்ளியாக வீச, அதனை சரியாக கணித்த சமித் டிராவிட், இன்சைட் அவுட் ஷாட் மூலமாக டீப் கவர் திசையில் சிக்சருக்கு அனுப்பினார். சாதாரணமாக அடிக்கப்பட்ட ஷாட், சிக்சருக்கு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் சமித் டிராவிட் பேட்டிங் செய்யும் போது கண்ணாடி அணிந்து கொண்டு வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் கடைசியாக கண்ணாடி அணிந்து பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் என்றால் அது சேவாக் தான். அதன்பின் யாரும் கண்ணாடி அணிந்து கொண்டு பேட்டிங் செய்ததில்லை. இதனால் சமித் டிராவிட் கண்ணாடி அணிந்து பேட்டிங் செய்வது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
இருந்தாலும் சமித் டிராவிட் டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்று பாராட்டுகள் வரத் தொடங்கியுள்ளது. மகாராஜா டிராபி டி20 தொடரில் சமித் டிராவிட் தனது திறமையை வெளிப்படுத்தினால் பல்வேறு ஐபிஎல் நிர்வாகிகளாலும் கவனிக்கப்படுவார். இதன் மூலம் மெகா ஏலத்தில் பெயரை பதிவு செய்தால், நிச்சயம் ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.