யாரு பாத்த வேலை இது..!! விபத்தில் ஜெயசூர்யா இறந்தார்…? சமூக ஊடகங்களில் ரவுண்டு கட்டிய புரளி
கொழும்பு:இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா உயிரிழந்து விட்டதாக செய்தி பரவியதையடுத்து, இந்திய அணி வீரர் அஸ்வின் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால் அவை புரளி என பின்னர் தெரிய வந்தது.
சமூக ஊடகங்களில் உண்மையின் தாக்கம் அதிகளவு இருக்கிறதோ இல்லையோ... நடக்காத ஒன்றை பற்றி கூறினால் தீயாய் ஊர் முழுக்க பற்றிக் கொண்டு எரிவது வாடிக்கை. அப்படி ஒரு செய்தி கண்ணு, மண்ணு தெரியாமல் பரவ.. சர்வதேச விளையாட்டு உலகமே அதிர்ந்து போனது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா. சமீபத்தில் கனடா நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, கார் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். கார் ஓட்டியவர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தபோது சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயசூர்யா உயிரிழந்ததார்.

ஜெயசூர்யா இறந்தார்?
இப்படித் தான் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. கூடவே, அந்த செய்தி உண்மை தான் என்று கனடாவில் உள்ள இலங்கை தூதரகமும் மரணத்தை உறுதி செய்ததாக வேறு தகவல். டொரண்டோ நகரில் நாளை நடக்கும் இறுதிச்சடங்கில் இலங்கை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி வலம் வந்தது.

முற்றிலும் பொய்
ஆனால், சமூக ஊடகங்களில் வெளியாக பரபரப்பை கிளப்பிய இந்த செய்தி முற்றிலும் பொய்யாகும். அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை. இந்த பொய்யான செய்தியைப் பார்த்த இந்திய அணியின் வீரர் அஸ்வின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதனை தமது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இணையத்தில் வைரல்
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயசூர்யா குறித்த செய்தி உண்மையானதா? வாட்ஸ் அப்பில் நான் ஜெயசூர்யா குறித்த செய்தியை அறிந்தேன், ஆனால் ட்விட்டரில் இது குறித்து ஏதும் தகவல் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்றார்.

ஜெயசூர்யா மறுப்பு
இதனிடையே, தம்மை பற்றி சமூக ஊடங்களில் வலம் வரும் செய்தியை ஜெயசூர்யா முற்றிலும் மறுத்திருக்கிறார். தான் சமீபத்தில் கனடாவுக்குச் செல்லவில்லை, இலங்கையில் தான் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
நலமாக இருக்கிறேன்
இது குறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சில விஷமத்தனமான இணைய தளங்கள் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளன. யாரும் நம்ப வேண்டாம். நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்.

தவிர்க்க வேண்டுகோள்
நான் இலங்கையில்தான் இருக்கிறேன். கனடாவுக்கு சமீபத்தில் செல்லவில்லை. தயவுசெய்து பொய் செய்தி பகிர்வதைத் தவிர்க்கவும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

2 ஆண்டுகள் ஐசிசி தடை
சமீபத்தில் இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் நடந்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஜெயசூர்யா ஒத்துழைப்பது இல்லை என்றும் செய்திகள் கசிந்தன. எனவே, 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் தொடர்பான எந்த விவகாரங்களிலும் பங்கேற்க கூடாது என்று ஐசிசி தடை விதித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications