டெல்லி: அஸ்வின் மற்றும் விராட் கோஹ்லியை இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா வெகுவாக பாராட்டினார்.
டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த சனத் ஜெயசூர்யா கூறியதாவது: அஸ்வின் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். தொடர்ச்சியாக இவ்வாறு செயல்படுவது முக்கியம். அவரது பந்து வீச்சு ஃபீல்டர்களை தாண்டி பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க விடாத அளவுக்கு துல்லியமாக உள்ளது.
விராட் கோஹ்லி இப்போதுதான் கேப்டனாகியுள்ளார். அவர், இன்னும் நிறைய காலம் செயல்பட வேண்டியுள்ளது. வீரர்களுடன் நேரத்தை செலவிடும்போது இன்னும் சிறந்த கேப்டனாக உருவாகுவார்.
சங்ககாரா, ஜெயவர்த்தனே போன்ற வீரர்கள் இடத்தை நிரப்புவது கடினம். எனவே சண்டிமால், திரிமன்னே போன்ற இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து இலங்கை அணி பொறுமை காக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஜெயசூர்யா தெரிவித்தார்.