இஸ்லாமாபாத் : நட்சத்திர தம்பதிகளான சானியா மிர்சா - சோயிப் மாலிக் விவாகரத்துக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் மீடியாக்கள் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக், அந்நாட்டு பிரபல நடிகையான சனா ஜாவித்தை திருமணம் முடித்துள்ளார். ஏற்கனவே ஆயிஷா சித்திக்கி மற்றும் சானியா மிர்சா ஆகியோரை திருமணம் செய்து பிரிந்துள்ள சோயிப் மாலிக், தனது 41 வயதில் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

2010ஆம் ஆண்டு சோயிப் மாலிக் - சானியா மிர்சா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், திடீரென இருவரும் பிரிந்துள்ளனர். சில ஆண்டுகளாக இருவருக்கும் கருத்து வேறு பாடு இருந்து வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக சானியா மிர்சா விவாகரத்து ஆனதை அறிவித்திருந்தார்.
இவர்கள் இருவரும் பிரிந்த சில நாட்களிலேயே சோயிப் மாலிக் அடுத்த திருமண உறவில் இணைந்துள்ளார். நடிகை சனா ஜாவித்தை விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் முதல்முறையாக சோயிப் மாலிக் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், அது நாளடைவில் திருமணத்தில் முடிவடைந்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சோயிப் மாலிக் - சனா ஜாவித்தின் இந்த திருமணத்தில் சோயிப் மாலிக்கின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் சோயிப் மாலிக்கின் சகோதரி ஸாசியா இம்ரான், சோயிப் மாலிக்கின் திருமணம் மீறிய உறவே, சானியா மிர்சாவின் விவாகரத்துக்கு காரணம். சோயிப் மாலிக்கின் தவறுகளால் சானியா மிர்சா சோர்வடைந்து விட்டதாகவும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ததால், அவர் விரக்தியடைந்ததாக கூறியுள்ளார்.
முதல் மனைவி ஆயிஷா சித்திக்கியை விட்டு 2010ஆம் ஆண்டு சோயிப் மாலிக் பிரிந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது சானியா மிர்சாவை விட்டு பிரிந்த சில மாதங்களிலேயே நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துள்ளார். இதனால் இந்திய விளையாட்டு ரசிகர்கள் சோயிப் மாலிக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.