பலத்த அதிர்ச்சி
சுஷாந்த் சிங் ராஜ்புத் தொலைக்காட்சியில் நடித்து பின் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படம் மூலம் தோனியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இளம் வயதில் அவரது மரணம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம்
மும்பையில் தன் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன மன அழுத்தம் இருந்தது என விசாரணை நடந்து வருகிறது. அவரது முன்னாள் மேனேஜர் சில நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
சானியா மிர்சா
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா, சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து ட்விட்டரில் உருக்கமான இரங்கல் பதிவை பகிர்ந்துள்ளார். தன்னுடன் டென்னிஸ் ஆட விரும்பியதையும் அவர் கூறி உள்ளார்.
உருக்கமான பதிவு
"சுஷாந்த்.. ஒருநாள் நாம் சேர்ந்து டென்னிஸ் ஆடுவோம் என்றாயே.. நீ முழுவதும் வாழ்வு மற்றும் சிரிப்பை கொண்டவன்.. நீ எங்கே போனாலும் சிரிப்பை பகிர்வாய்.. நீ இந்த அளவு காயம் அடைந்து இருப்பாய் என எங்களுக்கு தெரியாது. இந்த உலகம் உன்னை இழந்து தவிக்கும். இதை எழுதும் போதே நடுக்கமாக உள்ளது. அமைதியாக உறங்கு என் நண்பரே" என சானியா பதிவிட்டுள்ளார்.
எப்போதும் புன்னகை
சுஷாந்த் சிங் எப்போதும் புன்னகையுடன் இருப்பவர் என அவருடன் பழகிய அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். தோனியாக திரைபடத்தில் நடிக்க அவர் 18 மாதங்கள் எடுத்துக் கொண்டு தோனியின் நட்பு வட்டத்துடன் நெருங்கி பழகி உள்ளார். தோனியும், அவர்களும் சுஷாந்த் சிங்கின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.