மும்பை: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த சானியா மிர்சா, தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது எத்தனை சிரமமாக இருந்தது என ஒரு பேட்டியில் விவரித்துள்ளார். இன்னும் மூன்று முறை கூட கர்ப்பமாகி குழந்தை பெறலாம், ஆனால் தாய்ப்பால் ஊட்ட முடியுமா என தெரியவில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இஸ்ஹான் மிர்சா மாலிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு ஷோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா விவாகரத்து செய்திருந்தனர். அதன் பின் தனது மகனுடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்டுவது எத்தனை சிரமமாக இருந்தது என்பது பற்றி சானியா மிர்சா விவரித்தார். "நான் எனது குழந்தைக்கு 2.5 முதல் 3 மாதம் வரை தாய்ப்பால் ஊட்டினேன். குழந்தையை பிரசவிப்பதை விட இது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் இன்னும் மூன்று முறை கூட கர்ப்பம் ஆகி குழந்தை பெறலாம், ஆனால் தாய்ப்பால் ஊட்டுவதை என்னால் மீண்டும் செய்ய முடியுமா என தெரியவில்லை" என்று கூறினார்.
"உடல் அளவில் அது கடினமாக இல்லை. ஆனால் உணர்ச்சிபூர்வமாகவும், மனதளவிலும் அது நமது சக்தியை உறிஞ்சுவதாக இருந்தது. வேலை செய்யும் பெண்ணாக நம்மை அது கட்டிப்போடுவதாக இருந்தது. குழந்தைகள் எப்போதும் நம்மை சார்ந்திருப்பது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது அதற்காக நாம் சரியாகத் தூங்காமல் நமது அத்தனை வேலைகளையும் குழந்தைக்கு பாலூட்டுவதை சுற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்"
"என்னால் முடிந்தவரை நான் அதை செய்தேன். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் குழந்தை நல மருத்துவரை சந்தித்தேன். நான் என்னால் ஆன முயற்சியைச் செய்துவிட்டேன். இனியும் என்னால் இதை செய்ய முடியாது' என்று சொன்னேன். அவர் இன்னும் ஒரு மாதம் வரை முயற்சி செய்து பாருங்கள் என்றார். ஆனால் நான் எனது மனதை இழந்துவிடுவேன் என்று அவரிடம் சொன்னேன்"
"எனக்கு இது உணர்ச்சிபூர்வமாக மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் நாம் ஏற்கனவே பல்வேறு வேலைகளைச் செய்கிறோம். குழந்தை பிறப்புக்குப் பிறகு ஹார்மோன்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் எப்போதும் பொதுமக்களின் பார்வையில் இருக்கிறோம். அவர்கள் நம் உடலை கேலி செய்வார்கள். ஆனால் இந்தக் குழந்தை எப்போதும் தனது உணவுக்காக என்னை சார்ந்திருப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் இல்லை என்றால் அந்தக் குழந்தை என்ன செய்யும் என்று நான் நினைத்தேன்" இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.