ஐதராபாத் : பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சோயிப் மாலிக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது சானியா மிர்சா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் சானியா மிர்சா முதல்முறையாக இந்த திருமணம் குறித்து மௌனத்தை கலைத்துள்ளார். இது குறித்து சானியா மிர்சா குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சானியா மிர்சா எப்போதுமே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் பகிர்ந்து கொண்டது கிடையாது.

ஆனால் இன்று தன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. சானியா மிர்சாவும் சோயிப் மாலிக்கும் விவாகரத்து பெற்று பிரிந்து சில மாதங்கள் ஆகிறது. தற்போது சோயிப் மாலிக் தன்னுடைய புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு சானியா மிர்சா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த கடினமான காலகட்டத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் சானியா மிர்சாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தலையிடாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சானியா மிர்சா குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
சானியா மிர்சாவும் சோயிப் மாலிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு இஸ்ஹான் என்ற ஐந்து வயது குழந்தை இருக்கிறது. தன்னுடைய திருமணம் குறித்து அண்மையில் சானியா மிர்சா ஒரு பதிவு போட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில்," திருமணம் என்பது கடினமான விஷயம், விவாகரத்து என்பது கடினமான விஷயம். எனினும் எந்த கடினமான விஷயம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள். உடல் பருமனுடன் இருப்பதும் கடினம், உடல் தகுதியுடன் இருப்பதும் கடினம். இதில் எந்த கடினம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள். கடனுடன் இருப்பதும் கடினம், எந்தக் கடனும் இல்லாமல் இருப்பதும் கடினம். உங்களுக்கு எந்த கடினம் வேண்டுமோ தேர்வு செய்யுங்கள்.
ஒருவருடன் பேசுவதும் கடினம் பேசாமல் இருப்பதும் கடினம். வாழ்க்கை என்பது எப்போதுமே சுலபம் கிடையாது. நான் எப்போதுமே கடினத்தை தான் தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் எந்த கடினம் வேண்டும் என்பதை புத்தி கூர்மையுடன் தேர்வு செய்யுங்கள் என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார். இரட்டையர் டென்னிஸ் பிரிவில் ராணியாக விளங்கி வந்த சானியா மிர்சா ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.