ஹைதராபாத் : சமீபத்தில் சானியா மிர்சாவை கைவிட்டு மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரேர் சோயப் மாலிக். அதனால், சானியா மிர்சா விரக்தியிலும், மன அழுத்தத்திலும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
முன்னதாக சோயப் மாலிக் - சானியா மிர்சா இடையே விரிசல் ஏற்பட்டதாக கடந்த ஆண்டு முதல் செய்திகள் வெளியான நிலையில், அதன் உச்சமாக சோயப் மாலிக், பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். அவரை சானியா மிர்சா சில மாதங்கள் முன்பு தாமாக குலா எனும் முறைப்படி விவாகரத்து செய்தார்.

ஐந்து வயது மகன் இருக்கும் நிலையில், அவரின் எதிர் காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் சோயப் மாலிக் நடந்து கொண்டதால் சானியா மிர்சா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. சோயப் மாலிக் திருமணம் செய்வதற்கு சில நாட்கள் முன்பு சானியா மிர்சா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கை கடினமானது என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது சோயப் மாலிக் விவகாரத்தில் இருந்து தான் மீண்டு விட்டதை குறிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "பிரதிபலிப்பு" என மட்டும் குறிப்பிட்டு தான் கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதன் மூலம் தன்னைத் தானே பார்த்து கொள்வதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தன்னம்பிக்கையுடன் அந்த புகைப்படத்தில் காணப்படுவதால் நெட்டிசன்ஸ் வாழ்வில் அவரது அடுத்தகட்ட நகர்வுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
மறுபுறம் சோயப் மாலிக் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஓவரில் மூன்று நோ பால் வீசி, மேட்ச் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி இருக்கிறார். ரசிகர்கள் அவரது மூன்றாவது திருமணத்தோடும், சானியா மிர்சாவை அவர் கைவிட்டதோடும் முடிச்சு போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.