சென்னை: முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், தோனியின் ஓய்வு குறித்து பேசியிருப்பது அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், சிஎஸ்கே தானாக முன்னேறும் என நினைத்து ஓய்வு பெற்றிருப்பேன்" என்று பங்கர் கூறியிருக்கிறார்.
இது தோனி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியுள்ளது. பலர் சஞ்சய் பங்கர் விராட் கோலியின் தீவிர ஆதரவாளர் என்பதைக் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தற்போது தோனி செயல்பட்டு வருகிறார். 43 வயதிலும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறார்.

அடுத்த ஆண்டு தனது 44வது வயதில் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி சமீபத்தில் பேசிய பேச்சுக்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், அவர் அடுத்த ஆண்டும் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சஞ்சய் பங்கர் தோனியின் ஓய்வு குறித்துப் பேசியிருக்கிறார். "தோனியின் இடத்தில் நான் இருந்திருந்தால், 'போதும்' என்று கூறியிருப்பேன். அணியின் நலனை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருப்பேன். 43 வயதில் மிகவும் கடினமான தொடரில் எதற்காக விளையாட வேண்டும் என சிந்திக்க வேண்டும். 43 வயதாகும்போது எதற்காக இத்தனை போட்டி நிறைந்த சூழ்நிலையில் இருக்க வேண்டும்? அந்த வயதில் நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினாலும் எதற்காக ஒரு உடலை இத்தனை கடினப்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றும்."
"ஆனால், இது அனைத்துமே தோனி மனதில் என்ன இருக்கிறதோ அதைப் பொறுத்ததுதான். தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், 'போதும்; நான் என்னென்ன விளையாட வேண்டும் என்று நினைத்தேனோ அனைத்தையும் விளையாடிவிட்டேன். இனி அணியின் நலனை மனதில் வைத்து ஓய்வு பெற்றிருப்பேன். அணிக்காகவே நாம் விளையாடுகிறோம் என்று வைத்தாலும், அந்த இடத்தில் இருந்து நான் முன்னேறிச் சென்றிருப்பேன்."
"மேலும் அந்த இடத்தில் இருக்கும்போது அணியின் அடுத்த கட்டம் வேகமான நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், எத்தனை காலத்தில் அது நடக்கும் என நம்மால் ஊகித்துச் சொல்ல முடியாது. அப்போது நம் மனதை நாமே அமைதிப்படுத்திக்கொண்டு, 'நான் இப்போது விலகுகிறேன், இந்த அணி தானாகவே வளர்ச்சி அடையும். இன்னும் ஒரு வருடம் ஆகலாம், ஆனால் அது வளர்ச்சி அடையும் வரை நான் அங்கேயே இருக்கப் போவதில்லை' என்ற முடிவை எடுப்பேன். தோனி இடத்தில் இருந்தால் நான் இப்படித்தான் சிந்தித்து இருப்பேன்," இவ்வாறு சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார்.
தோனியை ஓய்வு பெறுமாறு சஞ்சய் பங்கர் கூறியிருப்பதை தோனி ரசிகர்கள் விரும்பவில்லை. அவர்கள் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.