மும்பை: முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்து இருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், அது சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் ஆணாக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அதன் மூலம் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார் என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. மேலும், ஆர்யன் என்ற தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டு இருக்கிறார். அவர் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் இடையே, தான் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் அவரது முடிவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது இந்த மாற்றம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்கு சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன்."
"ஆனால், இந்த ஆட்டத்தை தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. இது அத்தனை எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி." எனக் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போது ஆர்யனாக இருந்து அனயாவாக மாறியதால் அவருக்கு இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.